Doctor Vikatan: மலச்சிக்கல் நீங்க வெந்தயம் சாப்பிடலாமா?

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் எவை? தினமும் வெந்தயம் ஊறவைத்து உண்பது மலச்சிக்கலுக்குச் சிறந்தது என்கிறார்களே.... அது சரியா?

- மதன் (விகடன் இணையத்திலிருந்து)

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த, கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.

``மலச்சிக்கல் இல்லாமலிருக்க நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும் என்பதை அனேகமாகப் பலரும் அறிவார்கள். ஆனாலும் அவற்றின் அளவு பலருக்கும் தெரிவதில்லை. அந்தக் காலத்தில் பச்சடி, துவையல், கூட்டு, ரசம், பொரியல் என கலவையாகச் சாப்பிடுவார்கள். இன்றைய அவசர உலகத்தில் இரண்டு, மூன்று உணவுகள் சமைக்கவெல்லாம் யாருக்கும் நேரமிருப்பதில்லை. அதனால் சாலட், பொரியல், கூட்டு என ஏதேனும் ஒன்றாவது அவசியம் உணவில் இடம்பெற வேண்டும். சிப்ஸ், அப்பளம், நொறுக்குத்தீனிகளை சைடிஷாக வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதனால் நார்ச்சத்து உடலில் சேராது. மலச்சிக்கல் வரும். அதைச் சரியாக்க மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். மலச்சிக்கலுக்கான மருந்துகள் கிட்டத்தட்ட தூக்க மாத்திரைகள் எடுப்பது போன்றுதான்.

ஒருகட்டத்தில் பழகிவிடும். அந்த மாத்திரைகள் இல்லாமல் மலம் கழிக்க முடியாது என்ற நிலை வரும். பல காலத்துக்கு நார்ச்சத்து சப்ளிமென்ட்டுகளை எடுத்துப் பழகி, பிறகு ஒரு கட்டத்தில் வயிற்று உப்புசம், வாயுத் தொந்தரவு போன்றவற்றுடன் மருத்துவர்களைச் சந்திக்க வருபவர்கள் பலர். மலச்சிக்கலுக்கோ, செரிமானத்துக்கோ செயற்கையாக மருந்துகள் எடுத்துப் பழகுவது மிகவும் தவறு.

சிறுவயதிலேயே சரியான உணவுப்பழக்கத்தைப் பழக்க வேண்டும். மலச்சிக்கலுக்கு மற்றுமொரு காரணம் போதுமான நீர்ச்சத்து இல்லாதது. ஒவ்வொரு வேளை உணவிலும் மூன்றில் ஒரு பங்கு திரவ உணவாக இருந்தால் மலச்சிக்கலோ, அஜீரணமோ இருக்காது. அது ரசம், மோர் என எதுவாகவும் இருக்கலாம். இளநீர் குடிக்கலாம். உணவை கெட்டியாகச் சாப்பிடாமல், நிறைய ரசம், நீர்த்த சாம்பார், நீர்மோர் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

100 கிராம் வெந்தயத்தில் 7 கிராம் நார்ச்சத்து இருக்கிறது. அது மலச்சிக்கல் பிரச்னைக்கு மிகவும் நல்லது. வெந்தயத்தை ஊறவைத்தோ, பொடித்தோ சாப்பிடலாம். வெந்தயம் மட்டுமன்றி, ஓமம், சீரகம், கசகசா, தனியா போன்றவற்றையும் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம், இவற்றிலும் அதிக நார்ச்சத்து உள்ளது.

வெந்தயம்

கண்டங்கத்திரி என்றொரு மூலிகை கிடைக்கும். அதிலும் நார்ச்சத்து அதிகம். நாட்டு மருந்துக் கடைகளில் பொடியாகவும் கிடைக்கும். அதையும் பயன்படுத்தலாம். அமரந்த் சீட்ஸ் என்பது முளைக்கீரை விதை. இது இப்போது நிறைய கடைகளில் கிடைக்கிறது. அதை சமையலில் அல்லது மில்க் ஷேக்கில் சேர்த்துப் பயன்படுத்தலாம். நார்ச்சத்து நிறைந்தது என்பதால் மலச்சிக்கலைப் போக்கும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


from Latest News https://ift.tt/P7a6NuF

Post a Comment

0 Comments