12,000 வலி நிவாரண மாத்திரைகள்... 100 ஊசி மருந்துகள் பறிமுதல் - வாகனச் சோதனையில் சிக்கிய நபர்!

சென்னை பெருநகரில் கஞ்சா, போதைப்பொருள்கள், சட்டவிரோதமாக போதைக்கு பயன்படுத்தும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் உள்ளிட்டவற்றைக் கடத்தி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.கே.நகர் சுண்ணாம்பு கால்வாய் பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கைது

அப்போது அவ்வழியாக வந்த பைக்கை போலீஸார் மடக்கி சோதனை செய்தனர். அந்த பைக்கில் உடல் வலி நிவாரண மாத்திரைகளும், 10 மிலி அளவுள்ள ஊசி மருந்து குப்பிகளும் இருந்தன. அதுகுறித்து பைக்கை ஓட்டி வந்த திருநின்றவூரைச் சேர்ந்த வடிவுநாதனிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்து வடிவுநாதனை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் வடிவுநாதன், உடல் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவோர்களுக்கு சட்டவிரோதமாக சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 12,000 உடல் வலி நிவாரண மாத்திரைகள், 100 ஊசி மருந்து குப்பிகள், குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு வடிவுநாதனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



from Latest News https://ift.tt/YczGBiL

Post a Comment

0 Comments