நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த காக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் வனிதா செங்கோட்டையன். இவர், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், அவர் ராசிபுரம் அருகில் உள்ள மலையாம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் மணல் அள்ளுவதற்காக அனுமதி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் அதற்கு அனுமதி தர மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன், அவர் மகன் இளங்கவி, பா.ஜ.க பிரமுகர் வழக்கறிஞர் குமார் உள்ளிட்டோர், வட்டாட்சியர் கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, அவர்கள் வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த சக ஊழியர்கள் உடனடியாக வனிதா செங்கோட்டையன், அவர் மகன் இளங்கவி மற்றும் பா.ஜ.க வழக்கறிஞர் குமார் உள்ளிட்ட மூன்று பேரையும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பூட்டி சிறை பிடித்துள்ளனர். பின்னர், அங்குள்ள அரசு ஊழியர்கள் ராசிபுரம் காவல் துறை தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். ராசிபுரம் வட்டாட்சியரை தாக்கிய வழக்கறிஞர் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அதோடு, தி.மு.க பெண் பிரமுகரின் மகனான இளங்கவியையும் கைது செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க, பா.ஜ.க பிரமுகர்கள் தாசில்தாரை தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest News https://ift.tt/xJBqEMn
0 Comments