எனக்கு 38 வயதாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு பித்தப்பையில் கற்கள் காரணமாக பித்தப்பை அகற்றப்பட்டது. இதனால் உணவுப் பழக்க வழக்கங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா?
- தேவி மீனா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர் பி.செந்தில்நாதன்.
``பித்தப்பையை அகற்றுவதால் பொதுவாக உணவுக்கட்டுப்பாடு எதுவும் வலியுறுத்தப்படுவதில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு, கொழுப்புள்ள மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கச் சொல்வோம்.
பித்தப்பையில் தொற்று அல்லது கற்கள் உருவாவது போன்ற காரணங்களுக்காக பித்தப்பையை அகற்ற வேண்டி வந்தால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு உணவுக்கட்டுப்பாடு தேவையில்லை.
எப்போதும்போல, எல்லோரையும்போல எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். அதனால் அஜீரண பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. ஆனால் எதைச் சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவுகளை சரியான நேரத்துக்குச் சாப்பிட வேண்டும்.
பொதுவாக கொழுப்பு அதிகமுள்ள உணவுகளையும், அசைவ உணவுகளையும் கொஞ்சம் குறைத்துக்கொள்வது நல்லது. உங்களுக்கு வயதும் குறைவு. பித்தப்பையை அகற்றி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாகவும் சொல்லியிருக்கிறீர்கள். எனவே உணவுக்கட்டுப்பாடெல்லாம் தேவையே இல்லை. ஆரோக்கியமாகச் சாப்பிட்டு நலமோடு வாழுங்கள்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/mNPXbt4
0 Comments