நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார்மீது செருப்பு வீசப்பட்டது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``75-வது விடுதலை நாள் கொண்டாடப்படுகின்ற நேரத்தில், உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இறுதி மரியாதை செலுத்தச் சென்றார். அப்போது, அவரின் தேசியக்கொடி ஏற்றிய காரின்மீது காலணி வீசியிருக்கும் பா.ஜ.க-வினரின் அருவருக்கத்தக்க, அரசியல் பண்பாடற்ற செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க-வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க-வினர் உணரவேண்டும் என எச்சரிக்கிறேன். ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடிவிடலாம் என்று தமிழகத்திலே பா.ஜ.க-வினர் கனவுகாண வேண்டாம்.
ராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சர் காரின்மீது தாக்குதல் நடத்தி, உயிரிழிந்த ராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க-வுக்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இந்தச் சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் `நாட்டுப்பற்று' சாயம் வெளுத்துப்போயிருக்கிறது.
செருப்பு வீசுவது, சிலைகளைச் சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியல் தவிர வேறு எதுவும் பா.ஜ.க-வுக்குத் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது. பதற்றத்தைப் பற்றவைத்து வன்முறைகள் மூலமாகக் கட்சியை வளர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தால் மக்கள் மன்றத்தில் அவர்கள் அரசியல் அநாதைகளாவது நிச்சயம் என எச்சரிக்கிறேன்.
ஊரெல்லாம் தேசியக்கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக்கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க-வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள இயக்கம். சட்டத்தின் ஆட்சியை கடைப்பிடிக்கும் இயக்கம். அமைச்சரின் கார்மீது காலணி வீசியவர்கள் - தூண்டி விட்டவர்கள் – துணைபோனவர்கள் ஆகியோர்மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருப்பதால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.
from Latest News https://ift.tt/evGs7w1
0 Comments