Doctor Vikatan: பிரசவத்துக்கு பின் வயிற்றைச் சுற்றிவரும் தழும்புகளை முன்கூட்டியே தவிர்க்க முடியுமா?

Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதி விரிவடைவதால், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படுகிற தழும்புகளைப் போக்க ஏதேனும் வழிகள் உண்டா? அதைத் தவிர்க்க முன்கூட்டியே ஏதேனும் க்ரீம் உபயோகிக்கலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா...

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

கர்ப்பமான முதல் மாதத்திலிருந்தே இதற்கான அக்கறை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதாவது தரமான மாய்ஸ்ச்சரைசரை வயிற்றைச் சுற்றி மென்மையாகத் தடவி வரலாம். கண்ட கண்ட எண்ணெய்கள், மற்றவர்கள் பரிந்துரைக்கும் க்ரீம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி, அதீதமாக எதையும் செய்ய வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் வயிற்றுப்பகுதியானது பலூன் மாதிரி மெள்ள மெள்ள விரிவடைந்துகொண்டே போகும். குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப விரிய ஆரம்பிக்கும். அதனால் சருமப் பகுதியும் விரிவடைந்து, பிரசவத்துக்குப் பிறகு சுருங்குவதால் தழும்புகள் ஏற்படும்.

தழும்புகள் பெரிதாகத் தெரிவதைத் தடுப்பது மட்டுமன்றி, அந்தப் பகுதியிலுள்ள சருமம் வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்வதும் கர்ப்ப காலத்தில் அவசியம். சரும வறட்சி காரணமாக வயிற்றுப் பகுதியைச் சுற்றி அரிப்பும் ஏற்படலாம். அதையும் தவிர்க்க வேண்டுமென்றால் தரமான மாய்ஸ்ச்சரைசரை தடவி வந்தாலே போதுமானது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உபயோகிக்கவும்.

கர்ப்பம்

ஏன் எண்ணெய் தடவக்கூடாது என்ற கேள்வி சிலருக்கு எழும். எண்ணெய் தடவுவதன் மூலம் அந்த இடத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதே காரணம். அதனால்தான் மாய்ஸ்ச்சரைசிங் லோஷன் உபயோகிக்கப் பரிந்துரைக்கிறோம். ஆரம்பத்திலிருந்தே உபயோகிக்கும்போது தழும்புகள் பெரிதாகத் தெரிவதைத் தடுக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/rgC7DaX

Post a Comment

0 Comments