தசரா விழா: திடீரென பெருக்கெடுத்த வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட மக்கள் - 8 பேர் பலி | Video

வடமாநிலங்களில் நவராத்திரி, தசரா விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழா முடித்து துர்கா தேவி சிலையை ஆற்றில் கரைக்கும் வழக்கம் மேற்கு வங்க மாநிலத்தில் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு துர்கா தேவி சிலைகளை கரைக்க நூற்றுக்கணக்கான மக்கள் மால் ஆற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கியவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

இது தொடர்பாக மீட்பு படை அதிகாரிகள், "மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் துர்கா தேவி சிலைகள் கரைக்கும் விழா நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் நீரில் மூழ்கினர். இந்த சோகமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் அடங்குவர். இதுவரை, எட்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். உயிருடன் சுமார் 50 பேரை மீட்டுள்ளோம். சிறு காயங்களுக்கு உள்ளான 13 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. காவல்துறை, உள்ளூர் நிர்வாகத்தின் குழுக்களால் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேடுதல் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. வெள்ளம் ஏற்பட்டபோது மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களுடன் கைக் கோர்த்துக் கொண்டதால், அவர்களில் பலர் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.

மால் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் மேற்கு வங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான புலு சிக் பராய்க், "சம்பவம் நடந்தபோது நான் அந்த இடத்தில் இருந்தேன். நீர் ஓட்டம் மிகவும் வலுவாக இருந்ததால் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். பலரை இன்னும் காணவில்லை. தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் துர்கா பூஜை விழாவின் போது நடந்த அசம்பாவிதத்தால் வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள்" என்று பதிவிடப்பட்டிருக்கிறது.



from Latest News https://ift.tt/mfi68G2

Post a Comment

0 Comments