சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று முந்தினம் அடுத்தடுத்து இரண்டு பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகளில் அதிரடி ஆய்வு நடத்திட மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள், கிளை தொழில் செய்யும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

சீல் வைப்பு

அதேபோல், ராஜபாளையத்தை அடுத்த கொத்தங்குளம் கிராமத்தில் விக்னேஷ் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான 'ஜெயலட்சுமி' பட்டாசு ஆலை மற்றும் முடங்கியாறு சாலையில் சம்மந்தபுரத்தில் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான 'சிவசக்தி' பட்டாசு ஆலையிலும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், இரண்டு தொழில் நிறுவனங்களிலும் பட்டாசு தயாரிக்க பயன்படும் சல்பர் மூலப்பொருளை பயன்படுத்துவதற்கான உரிமம் முடிவடைந்தது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பட்டாசு ஆலைகளையும் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.



from Latest News https://ift.tt/n0j8OQA