``சு.வெங்கடேசன், எங்களைப் பற்றி தவறாக திரித்து எழுதி கொண்டிருக்கிறார்" - ஆளுநர் தமிழிசை காட்டம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த தமிழிசை சௌந்தரராஜன் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "மதுரை மீனாட்சியை வணங்குவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. சமீபத்தில் குடியரசுத் தலைவர் இங்கு வழிபாடு செய்திருந்தார். நாட்டின் முதல் குடிமகனாக இருக்கும் பெண் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்து வழிபடும் பெருமையை பிரதமர் ஏற்படுத்தி தந்துள்ளார்.

மதுரையில் தமிழிசை

ஆளுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறையாக ராஜ்பவன் உள்ளது, தமிழக மக்கள் மீது எங்களுக்கு அன்பு இல்லை என்று எம்.பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.உதயகுமார் மகள் திருமண விழாவில் ஆளுநர் தமிழிசை

உண்மையில் தமிழக மக்கள் மீது அதிக அன்பு கொண்டுள்ளோம். அப்படி அன்பு செலுத்திய காரணத்தால்தான் இந்தியாவில் 4 மாநில ஆளுநர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வெங்கடேசன் எம்.பி, எங்களைப்பற்றி தவறாக திரித்து எழுதி கொண்டிருக்கிறார்.

ஆளுநர்களுக்கு யார் அங்கீகாரம் கொடுத்தாலும் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்பதுபோல பேசும் எம்.பி வெங்கடேசனுக்குதான் உண்மையில் தமிழக மக்கள் மீது அக்கறையில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலக தரத்தில் கட்டப்படவேண்டிய ஒன்று. ஏற்கனவே, 50 மாணவர்கள் படிக்கும் நிலையில் கூடுதலாக மாணவர்கள் படிக்கும்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். தமிழகத்திற்கு எய்ம்ஸ் வர வேண்டும் என மத்தியில் இப்போதுள்ள ஆட்சியாளர்கள்தான் நினைத்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் நினைக்கவில்லை.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. ஆயுஷ்மான் திட்டம் போன்று யாரும் சிந்திக்காத திட்டங்களை எல்லாம் பிரதமர் செயல்படுத்தி வருகிறார். எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என சொல்லும் கருத்து தவறானது" என தெரிவித்தார்.



from Tamilnadu News https://ift.tt/l7r1Hvx

Post a Comment

0 Comments