அட, இது சூப்பரா இருக்கே; ஊசி தேவையில்லை... வலியில்லாமல் மருந்து செலுத்தும் புதிய தொழில்நுட்பம்!

நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள், வாய் வழியாகவோ அல்லது ஊசி மூலமாகவோ செலுத்தப் படுகின்றன. மாத்திரைகள் உட்கொள்ள பலரும் முகம் சுளிப்பதுண்டு; அதேபோல், ஊசி போடுவது என்றால் அலறி ஓட்டம் பிடிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த நிலையில், மருந்துகளை உட்கொள்ளவும், ஊசி போடுவதை விரும்பாதவர்களுக்கும் வலியில்லா முறையில், மருந்துகளை வழங்கக்கூடிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர், எம்.ஐ.டி-யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்.

இவர்கள், அல்ட்ராசோனிக் அலைகள் மூலமாக சருமத்தின் வழியே மருந்துகளை உட்செலுத்தும், அணியக்கூடிய பேட்ச் (wearable patch) ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

பல சன்ஸ்கிரீன்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களில் காணப்படும் வைட்டமின் பி, நியாசினமைடை (Niacinamide) பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இந்தச் சாதனத்தைச் சோதித்துள்ளனர். 

அதில் சாதாரணமாக சருமத்தில் செலுத்தப்படும் மருந்துகளைக் காட்டிலும், அல்ட்ராசோனிக் பேட்ச் மூலமாகச் செலுத்தப்படும் மருந்துகள் சருமத்தை 26 மடங்கு அதிகமாக ஊடுருவிச் சென்றுள்ளன. 

அல்ட்ராசோனிக் பேட்ச் செயல்படும் முறை:

இந்த அல்ட்ராசோனிக் பேட்ச்சில் டிஸ்க் வடிவ பைசோஎக்ட்ரிக் டிரான்ஸ்டூசர்கள் (piezoelectric transducers) உட்பொதிக்கப்பட்டுள்ளன. இவை மின்சாரத்தை இயந்திர ஆற்றலாக மாற்றுகின்றன.

ஒருவர் இந்த பேட்ச்சை ஆக்டிவேட் செய்யும் பட்சத்தில், இந்த டிரான்ஸ்யூசர்கள் திரவத்தில் அழுத்த அலைகளை ஏற்படுத்தி, சருமத்தில் உடையும் குமிழிகளை உருவாக்குகின்றன. உடையும் குமிழிகளில் இருந்து மைக்ரோஜெட்கள் (Microjets) உருவாகின்றன.

அல்ட்ராசோனிக் பேட்ச்

இந்த மைக்ரோஜெட்கள் ஜெட் வேகத்தில் சருமத்தின் கடினமான பகுதிகளையும் ஊடுருவி, எங்கு மருந்துகள் செலுத்தப்பட வேண்டுமோ அங்கே கொண்டு சேர்க்கின்றன.

மெல்லிய ஊசிகள் மூலமாக சருமத்தின் மேல் அடுக்கில் சிறிய துளைகளை உருவாக்கும் முறைக்கு மைக்ரோநீட்லிங் (Microneedling) எனப் பெயர். ஆரோக்கிய பராமரிப்புக்காக இம்முறை செயல்படுத்தப்படுகிறது.

இந்த முறையில் நியாசினமைடு ஆறு மணிநேரம் செலுத்தப்படும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பேட்ச், வெறும் 30 நிமிடங்களிலேயே இந்த மருந்தைச் செலுத்தி விடுகிறது.

இந்தச் சாதனம் சருமத்தில் சில மில்லிமீட்டர்கள் வரை மட்டுமே மருந்துகளை ஊடுருவிச் செல்ல அனுமதிக்கிறது. நியாசினமைடு, வைட்டமின் சி அல்லது தீக்காயங்களைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் மேற்பூச்சு மருந்துகள் போன்றவற்றை வழங்கும் வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வரும்காலங்களில் இந்தச் சாதனமானது ரத்த ஓட்டம் வரை செல்லும் மருந்துகளுக்குப் பயன்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புற்றுநோய் அல்லது பிற நோய்களுக்கு மருந்துகளை வழங்கி சிகிச்சையளிக்க, இது போன்ற சாதனங்களை உடலுக்குள் பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதனால் மருந்துகளை எடுத்துக் கொள்வதில் நோயாளிகளுக்கு ஒருவித ஆறுதல் கிடைக்கும். வலியும் இருக்காது. சரும சிகிச்சைகளில் இந்தத் தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from Latest news https://ift.tt/wybDju9

Post a Comment

0 Comments