திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள பி.மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் (28) - சாரதா (22) தம்பதியர். விவசாயத் தொழில் செய்து வந்த இத்தம்பதியினர், துறையூர் சோபனபுரத்தைச் சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்துள்ளனர். அதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாகவே சோபனபுரத்தில் தோட்டத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்து தான் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், ராஜ்குமாரும் சாரதாவும் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே காற்றோடமாக இருக்கும் என கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்கிய நிலையில், காலையில் இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தனர்.
விடிந்ததும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், தம்பதியர் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்ந்து அதிர்ச்சியடைந்து, உப்பிலியபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து, கொலை செய்யப்பட்டுக் கிடந்த தம்பதியரின் சடலங்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகள் குறித்தான தடயங்களைச் சேகரித்தனர். இரட்டைக் கொலை நடைபெற்றதைத் தொடர்ந்து திருச்சி எஸ்.பி சுஜித்குமார் மற்றும் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். தம்பதியர் அணிந்திருந்த நகைகளோ, அவர்கள் வீட்டிலிருந்த பொருள்களோ எதுவும் திருடு போகாத நிலையில், இந்தக் கொலைச் சம்பவம் எதனால் நடைபெற்றது என உப்பிலியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இத்தம்பதியினர் காதல் திருமணம் செய்துள்ளனர். இதன்காரணமாக இக்கொலை நடந்துள்ளதா? தொழில் போட்டியால் இது நடந்துள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தில் பதிவான செல்போன் டவர் சிக்னல்கள், தம்பதியரின் செல்போன் கால் ஹிஸ்டரி போன்றவற்றை வைத்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
from Latest news https://ift.tt/eWTf1lC
0 Comments