கனமழை, கடும் கோடை... பருவநிலை மாற்றத்தின் பாடம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘வரலாறு காணாத கனமழை’ என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகம் முழுக்கவே பரவலாகப் பதிவாகி வருகிறது. இதற்கு அண்மை உதாரணம், துபாயில் கொட்டித் தீர்த்த பெருமழை. “அந்த இருண்ட மேகங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் மூடிவிட்டன. பகல், இரவுபோல மாறியது. சூறைக்காற்றுப் பலமாக வீசியது. வீட்டிலிருந்த பொருள்கள் தூக்கி வீசப்பட்டன” என்று துபாய் மக்கள் துயரத்துடன் பேசியபடியே இருக்கிறார்கள்.

அந்தப் பாலைவன நாட்டில் ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித்தீர்த்தது. துபாயில் மட்டுமல்ல, இனி, உலகம் முழுக்க இப்படித்தான் நடக்கும் என்று சூழலியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். காரணம், பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான். இதன் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் ஆண்டுச் சராசரி மழைப்பொழிவு சுமார் 30 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நம் நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்தைவிட, தென்மேற்குப் பருவ மழை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அண்மையில் அறிவித்திருக்கிறது. இது மகிழ்ச்சியான செய்தி அல்ல. எது இயல்புக்கு மீறி வந்தாலும் அது ஆபத்தையும் அழிவையும் ஏற்படுத்தும். இன்றைய பருவமழை என்பதே, பருவநிலை மாற்றத்தால் உருவாகும் பாதிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

‘‘உலகம் முழுக்கத் தொழிற்சாலை வாயு, பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரிப்பதால் தொடர்ந்து பூமிப்பந்தின் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால், கடும் வறட்சி, அளவுக்கு மீறிய பெரு மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும்’’ என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகிறார்கள். அதன் பலனைத்தான், கடும் கோடையாகவும், கொட்டித்தீர்க்கும் கனமழையாகவும் அறுவடை செய்து வருகிறோம். இது இயற்கையின் இறுதி எச்சரிக்கை. இனியாவது, சூழலுக்குக் கேடும் செய்யும் செயல்களைக் குறைப்போம். பூமிப்பந்து வெப்பம் அதிகரிப்பதைத் தடுப்போம்.

-ஆசிரியர்



from Vikatan Latest news https://ift.tt/LkZl9Kj

Post a Comment

0 Comments