வெள்ளத்துரை: திடீர் சஸ்பெண்ட்... திடீர் நடவடிக்கை `ரத்து' - உள்துறை முடிவின் பின்னணி என்ன?

திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் ஏ.டி.எஸ்.பி-யாக பணியாற்றி வந்தார் வெள்ளத்துரை. இவர் அதிரடி நடவடிக்கைக்கு பெயர் போனவர். அதோடு காவல்துறையில் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரெடுத்தவர். இந்தச் சூழலில்தான் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை கடந்த 31-ம் தேதி பணியிலிருந்து ஒய்வு பெற இருந்தார். ஆனால் கடந்த 30-ம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டார். இதுகாவல்துறையில் பேசு பொருளானது. வெள்ளத்துரை தரப்பும் இந்த சஸ்பெண்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட ஆலோசனை நடத்தியது.

சஸ்பெண்ட் ஆர்டர்

இந்த நிலையில் ஒவ்வொரு மாத இறுதியில் சட்டம் ஒழுங்கு குறித்து தலைமைச் செயலகத்தில் உள்துறை அலுவலர்களுடன் காவல்துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசிப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் (31.5.2024) நடந்த கூட்டத்தில் வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அப்போது காவல்துறை தரப்பிலிருந்து வெள்ளத்துரை நீதிமன்றத்துக்குச் சென்றால் என்ன பதில் சொல்வது என விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு சஸ்பெண்ட் செய்ய காரணமாக சொல்லப்பட்ட சி.பி.சி.ஐ.டி வழக்கின் ரிப்போர்ட் வெள்ளத்துரைக்கு சாதகமாக இருப்பதால் என்ன செய்வது என காவல்துறை தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையில் வெள்ளத்துரை சஸ்பெணட் செய்யப்பட்ட செய்தி முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முடிவு எடுக்க கூடிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வெள்ளத்துரை சஸ்பெண்ட் முடிவு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். அதில் சில நிபந்தனைகளோடு வெள்ளத்துரையை ஒய்வு பெற அனுமதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு உடனடியாக அதற்காக ஆர்டரும் உள்துறையிலிருந்து வெளியானது. அதன்பிறகே வெள்ளத்துரை சஸ்பெண்ட் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

டிஜிபி அலுவலகம்

இதையடுத்து வெள்ளத்துரையை ஒய்வு பெற அனுதிப்பதற்கான வேலைகள் டிஜிபி அலுவலகத்தில் நடந்தது. இந்த தகவலை கேள்விப்பட்ட வெள்ளத்துரை தரப்பு நிம்மதியடைந்தது.

இதுகுறித்து உள்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்படும் முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்படாது, ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும்பட்சத்தில் அவரை ஒய்வு பெற அனுமதிக்க முடியாது. அந்த அடிப்படையில்தான் வெள்ளத்துரை மீது இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு காவல்துறை தரப்பில் சிலர் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து வெள்ளத்துரை மீது மாநில மனித உரிமை ஆணைய வழக்குகளின் அடிப்படையில் அவரின் பணபலன்களிலிருந்து ஒரு வழக்குக்கு 3 லட்சமும் இன்னொரு வழக்குக்கு 2 லட்சமும் பிடித்தம் செய்து அவரை ஒய்வு பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஒருதலை பட்ச நடவடிக்கையும் இல்லை" என்றனர்.

வெள்ளத்துரை தரப்பில் நம்மிடம் பேசியவர்கள் ``காவல்துறையில் இதற்கு முன்பு சர்சையில் சிக்கியவர்களை எல்லாம் ஒய்வு பெற இந்த உள்துறை அனுமதியளித்திருக்கிறது. ஆனால் வெள்ளத்துரை விவகாரத்தில் இப்படி கடுமையாக நடந்து கொண்டிருப்பதன் பின்னணியில் ஒரு சிலர் இருக்கிறார்கள். சஸ்பெண்ட் ரத்து செய்யப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் எங்களுக்கு நியாயம் கிடைத்திருக்கும்'' என்றனர்



from Vikatan Latest news https://ift.tt/fYSlkxs

Post a Comment

0 Comments