`பாஜக, ஆளுநரிடம் மனு கொடுத்ததால், ஆட்சியைக் கலைத்து விடுவாரா?' - முத்தரசன் கேள்வி!

"கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தியாவில் தலைசிறந்த மருத்துவர்களை உருவாக்க நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்கள், நீட் தேர்வு வருவதற்கு முன்பே தலைசிறந்த மருத்துவர்கள் சேவையாற்றி வருகிறார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோதே நீட் தேர்வு  முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

நீட் தேர்வு குளறுபடிக்கு ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும், நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், நீட் தேர்வு தேவையில்லை எனும் கருத்து தமிழகத்தை கடந்து பல மாநிலங்களிலிருந்து வந்து கொண்டிருக்கிறது.

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட்டு தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும், மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஒரு கோடி பணியாளர்களுக்கு வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான உரிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும், ஐந்தில் ஒரு பங்கு நிதி மட்டுமே ஒன்றிய அரசு தற்போது வழங்கி வருகிறது, நிதியை காரணம் காட்டி தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

முத்தரசன்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு மனிதாபிமான முறையில் நிவாரணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க உயர்மட்ட குழு அமைக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டால் அதில் அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவரையும், காவல்துறை அதிகாரியையும் பொறுப்பாக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறையினர்மீது வழக்கு பதிவுசெய்து கைது செய்யப்பட வேண்டும்.  கள்ளச்சாராய விவகாரத்தை வைத்து அதிமுக-வும், பாஜக-வும் அரசியல் செய்கிறது, முதல்வர் பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை விட வேண்டுமென அதிமுக-வும் பாஜக-வும், நினைக்கிறது. கள்ளக்குறிச்சி  விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் எடப்பாடி பழனி்சாமி ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

கள்ளச்சாராய விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுத்திருக்கும். கள்ளச்சாராய விவகாரத்தை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

ஆளுநர் ரவி

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள், மதுவிலக்கு பிரிவில் உள்ள கருப்பு ஆடுகள், சாராய வியாபாரிகளிடமிருந்து வாரம்தோறும் பணத்தை பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் 15 ஆண்டுகளாக பணியாற்றிய காவல்துறையினர் குறித்து ஆய்வு செய்ய வேண்டும், தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் பாஜக ஆளுநரை சந்தித்து அரசியல் செய்கிறது, கள்ளச்சாராய விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை சந்தித்துதானே பாஜக மனு கொடுத்திருக்க வேண்டும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதம் நடத்தி இருக்கலாமே? பாஜக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் ஆளுநர் ஆட்சியை கலைத்து விடுவாரா? அப்படி ஆட்சியை கலைத்தால் நாங்கள் சும்மா விட்டு விடுவோமா?

முத்தரசன்

எடப்பாடி பழனிசாமியும் அண்ணாமலையும், மலிவான அரசியலை செய்து வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மக்களுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/JGS3vwq

Post a Comment

0 Comments