`தொழில் வரி, உரிம கட்டணம் அதிரடி உயர்வு; மேயரின் அமெரிக்க பயண செலவு’ - சென்னை மாமன்ற கூட்ட ஹைலைட்ஸ்

பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை (30.07.2024) மாததுக்கான மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், புதிதாக சென்னை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங்கின் இறப்புக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த ம.தி.மு.க, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மத்திய பட்ஜெட்டின் நகலை கிழித்தெரிந்தனர். இதனால் அவையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, புதிய கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்-க்கு கவுன்சிலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். தொடர்ந்து, மேயர் பிரியா சொத்துவரி வசூலிக்கும்போது பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

துணைமேயர் மகேஷ்குமார், `மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் நடைபாதைகள் அமைப்பது, பழுதடைந்த பேருந்து நிழற்குடைகளை சீரமைப்பது, நிழற்குடைகள் அருகே குப்பைத்தொட்டிகள் அமைப்பது, விளம்பரப் பலகைகள் அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, தனியார் நிறுவனங்களுக்கு வரி விதிப்பு செய்வதில் மறுசீராய்வு உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை புதிய கமிஷனரிடம் முன்வைத்தார்.

புதிதாக கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் ஜெ.குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்

அதைத்தொடர்ந்து, கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போதும், நேரமில்லா நேரத்தின்போதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகள், மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் குறித்து பேசினர். குறிப்பாக நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன், `ஈ.சி.ஆரில் உள்ள பல ஹெஸ்ட் ஹவுஸ்களின் உரிமையாளர்கள் தங்கள் சொகுசு பங்களாக்களை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், அந்த பங்களாக்களுக்கு நாம் வீட்டுவரிதான் வசூலிக்கிறோம். அவர்களுக்கு கமர்ஷியல் வரி விதிக்க வேண்டும். அதேபோல, கலா ஷேத்ரா நிர்வாகம் மாநகராட்சிக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கிறது. அதை மீட்டெடுக்க வேண்டும்!" எனக் கேட்டுக்கொண்டார்.

அதேபோல 145-வது வார்டு கவுன்சிலர் சத்தியநாதன் சென்னையில் பெருகிவரும் குற்றச்செயலை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் சென்னை மாநகராட்சி முழுவது சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

மேயர் பிரியா

குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் விதிக்கப்படும் அபராதத்தொகை மாடு ஒன்றுக்கு ரூ.5,000-லிருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே மாடு இரண்டாம் முறை பிடிக்கப்படும் போது அதற்கான அபராதத்தொகை ரூ.15,000 எனவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பிடிபட்ட மூன்றாம் நாள் முதல் பராமரிப்பு செலவாக மாடு ஒன்றுக்கு ரூ.1000 கூடுதலாக உயர்த்தி வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதேபோல, அமெரிக்காவில் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சான் ஆண்டோனியோ தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய மூன்று நாள் விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவும், அவருக்கு உதவியாக அவரின் உதவியாளரும் சென்று கலந்துகொண்தற்கு செலவிடப்பட்ட விமான பயணச் செலவு தொகை ரூ. 8,68,466 என மாமன்றத் தீர்மானத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, சென்னை மாநகராட்சியின் சொந்த வருவாயைப் பெருக்கும் நோக்கில், வருவாய்த்துறை தொழில்வரிக்கான விகிதம் அரையாண்டிற்கு 35% வரை உயர்த்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, ஆறு மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் ரூ.21,001 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி ரூ.135-லிருந்து ரூ.180 ஆகவும், ரூ.30,001 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.315-லிருந்து ரூ.430 ஆகவும், ரூ.45,001 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.690-லிருந்து ரூ.930 ஆக வரியை உயர்த்திட சென்னை மாநகராட்சியில் தீர்மானம் போடப்பட்டது. அதேசமயம், ரூ.60,001 முதல் ரூ.75,000 மற்றும் ரூ.75,001 அதற்கும் மேல் வருமானம் உள்ளவர்கள் யாருக்குமே தொழில்வரி உயர்த்தப்படவில்லை. எனவே இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் கவுன்சிலர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

மாமன்றக் கூட்டம்

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான உரிமம் பெறும் கட்டணத்தை சென்னை மாநகராட்சி பன்மடங்கு அதிகரித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, மிக சிறிய வணிகம்(Micro), சிறிய வணிகம்(Small), நடுத்தர வணிகம்(Medium), பெரிய வணிகம்(large) ஆகிய வணிக தன்மைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, மிகச் சிறிய வணிக நிறுவனத்துக்கு ரூ.500 ஆக இருந்த தொழில் உரிம கட்டணமானது ரூ.3,500 ஆகவும், சிறிய வணிகத்துக்கு ரூ.7,000 ஆகவும், நடுத்தர வணிகத்துக்கு ரூ.10,000 ஆகவும், பெரிய வணிகத்துக்கு ரூ.15,000 என்ற அளவிலும் பன்மடங்காக தொழில் உரிம கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், சென்னையில் இதுவரை சில நூறுகளில் இருந்த தொழில் உரிமக் கட்டணம் தற்போது பல ஆயிரங்களில் உயர்த்தப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from Vikatan Latest news https://ift.tt/MzPX8km

Post a Comment

0 Comments