இமாச்சல் நிலச்சரிவில் சிக்கிப் புதைந்த பேருந்து; 18 பேர் பரிதாப பலி; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இமாச்சலப் பிரதேசத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்து தொடர்பாக வெளியான தகவலின்படி, தனியார் பேருந்து ஒன்று 30 முதல் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து குமர்வின் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

பேருந்து நேற்று (அக்டோபர் 7) மாலை இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பலுகாட் அருகே சென்றுகொண்டிருந்தபோது கனமழை காரணமாக மலையிலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவு நேராகப் பேருந்தின்மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இமாச்சலப் பிரதேசம் - நிலச்சரிவு
இமாச்சலப் பிரதேசம் - நிலச்சரிவு

இந்த நிலச்சரிவுக்குள் பேருந்து சிக்கிப் புதைந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடனடியாக முதற்கட்டமாக சம்பவ இடத்துக்கு ஜே.சி.பி கொண்டுவரப்பட்டு, காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ட்வீட்டில், "இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதையறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-ம் நிவாரணத்தொகையாக வழங்கப்படும்" என்று மோடி தெரிவித்திருக்கிறார்.

மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.



from Vikatan Latest news https://ift.tt/jsSAnUH

Post a Comment

0 Comments