Doctor Vikatan: எப்போதும் காதுகளில் அரிப்பு; பட்ஸ் உபயோகித்தால் மட்டுமே தீர்வு: என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 56. எனக்கு எப்போதும் காதுகளில் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அப்படி அரிக்கும்போது, பட்ஸ் வைத்துக் குடைந்தால்தான் அரிப்பு நிற்கிறது. இது தினசரி வாடிக்கையாகவே இருக்கிறது. காதுகளில் அரிப்பு ஏற்பட என்ன காரணம்... இதற்கு சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, காது, மூக்கு, தொண்டை  சிகிச்சை மருத்துவர் தீபிகா. 

காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா
காது, மூக்கு, தொண்டை சிகிச்சை மருத்துவர் தீபிகா

காது குடைவது என்பது பலருக்கும் ஒரு பழக்கம் போல மாறிவிடுகிறது. ஆனால், இது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் காதுகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய சிக்கலாக மாறலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

காது அரிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களுக்கு அவற்றில் எது காரணமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அந்த வகையில்,  காதில் சுரக்கும் மெழுகு (Ear wax) ஒருவித பாதுகாப்பு அடுக்காகச் செயல்படும். அதை நாம் அடிக்கடி சுத்தம் செய்வதால், காதுகளின் உட்பகுதி வறண்டு அரிப்பு உண்டாகிறது. குளிக்கும்போது காதுக்குள் தண்ணீர் செல்வதால் அல்லது அதிக வியர்வை காரணமாக பூஞ்சைக் கிருமிகள் வளர்வதால் அரிப்பை ஏற்படலாம்.

ஜலதோஷம் அல்லது காது அடைப்பு காரணமாக நடுக்காதில் ஏற்படும் அழுத்த மாறுபாடும் அரிப்பைத் தூண்டும். சோப், ஷாம்பூ அல்லது காதணிகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் அரிப்பு வரலாம்.

சோப், ஷாம்பூ அல்லது காதணிகள் காரணமாக ஏற்படும் அலர்ஜியாலும் அரிப்பு வரலாம்.

காரணம் என்னவாக இருந்தாலும், காதுகளைக் குடைவது அரிப்பைத் தீர்க்காது/ மாறாக,  பிரச்னையை மேலும் அதிகப்படுத்தும். பட்ஸ் (Ear buds), சேஃப்டி பின் அல்லது குச்சிகளைப் பயன்படுத்தும்போது காதுகளின் மென்மையான சருமம் கிழிந்து ரத்தம் வரலாம். கைகளில் உள்ள கிருமிகள், காதுக்குள் சென்று 'ஓடிடிஸ் எக்ஸ்டர்னா' (Otitis Externa) போன்ற வெளிக்காது அழற்சியை உண்டாக்கலாம். காது குடையும்போது, தவறுதலாக, காதுத் திரையை (Ear drum) குத்தினால் நிரந்தரமாக  காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளது.

அரிப்பு ஏற்படும்போது உடனடியாகக் குடையாமல் கீழ்க்காணும் விஷயங்களைப் பின்பற்றலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிய பஞ்சு உருண்டையை நனைத்து, அதிகப்படியான எண்ணெயைப் பிழிந்துவிட்டு காதின் நுழைவாயிலில் மென்மையாக வைக்கலாம். இது வறட்சியை நீக்கி இதம் தரும். காது தானாகவே மெழுகை வெளியேற்றும் தன்மை கொண்டது. எனவே, பட்ஸ் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் காது விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காது குடைவதால் ஏற்படும் சிறிய காயம் கூட, Malignant Otitis Externa எனப்படும் மிகக் கடுமையான எலும்புத் தொற்றுக்கு வழிவகுக்கும். இது குணமடைய நீண்டகாலம் எடுக்கும் என்பதால், நீரிழிவு நோயாளிகள் காது குடையக்கூடாது.

மருத்துவர் காதுக்குள் கேமரா (Otoscopy) மூலம் பார்த்து, அது பூஞ்சைத் தொற்றா அல்லது வறட்சியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

அரிப்புடன் சேர்ந்து காதில் நீர் அல்லது சீழ் வடிந்தாலோ, காதில் வலி அல்லது வீக்கம் இருந்தாலோ, கேட்கும்  திறன் குறைவது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ காது-மூக்கு-தொண்டை மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மருத்துவர் காதுக்குள் கேமரா (Otoscopy) மூலம் பார்த்து, அது பூஞ்சைத் தொற்றா அல்லது வறட்சியா என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   



from Vikatan Latest news https://ift.tt/HrO4sIl

Post a Comment

0 Comments