தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அக்கழகத்தின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ”கடந்த 25 ஆண்டுக்காலம், நாட்டில் குப்பைகளை கொட்டியே பல கோடிகளைத் தேடி தற்போது நீதிமன்றத்தில் ஒரு பொருளாதார குற்றாவாளியாக நிற்கிற ஒருவரை வீட்டிற்கு அனுப்புகிற நாள் நெருங்கி விட்டது என்பதை உணர்த்துவதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன்” என, திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை குற்றம்சாட்டி பேச்சைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு பெரிய பகையை எதிர்த்து எங்கள் தலைவர் விஜய், அரசியல் களத்தில் நிற்கிறார். கடந்த காலங்களில், தே.மு.தி.க கட்சியை நண்பர் விஜயகாந்த் உருவாக்கினார், மக்கள் நலனூக்காக உழைத்தார். ஆனால், அந்தக் கட்சியில் விருப்பமனு வாங்குவதற்குக்கூட அந்த ஆள் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. அந்த கட்சி தற்போது கரைந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு மாற்றாக அரசியல் மாற்றத்தையும், ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்திட வேண்டும் என்ற வேகத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தார். தி.மு.க மீது கூர்மையைத் தீட்டினார். ஆனால், தற்போது அறிவாலயத்தின் தாழ்வாரத்தில் படுத்துக் கிடக்கிறார். ஜனநாயகனுக்கு எதிராக பராசக்தியா? ஓடியதா பராசக்தி?
அது ஓடவில்லை என்ற போதே தெரியவில்லையா? உங்கள் நாடகம் இனி நடக்காது. ஜனநாயகன் வராது என்று கருதினீர்களா? நதி நடக்க மறுத்தாலும் வெள்ளம் நிற்காது. ஜனநாயகன் வரும்போது உங்கள் நாற்காலியில் இருந்து நீங்கள் நகர வேண்டியது வரும். நீங்கள் எப்போது வெள்ளி நாற்காலியில் அமர்ந்தீர்களோ, அப்போதே உங்களது முதல்வர் நாற்காலி நகரத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வர் தம்பி விஜய்தான். அந்த வார்த்தைக்கு வடிவம் தாருங்கள்” என்றார்.
from Vikatan Latest news https://ift.tt/tNSFHeC
0 Comments