சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பாத்திரங்களின் (Pans) கைப்பிடி நுனியில் ஒரு சிறிய துளை இருப்பதை பார்த்திருப்போம். அது எதற்காக வடிவமைக்கப்பட்டது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
இந்தத் துளையின் மிக முதன்மையான பயன்பாடு, பாத்திரங்களை ஆணியிலோ அல்லது கொக்கியிலோ தொங்கவிடுவதற்காகவே. முந்தைய காலங்களில் சமையலறைகளில் பெரிய அலமாரிகள் கிடையாது. எனவே, சமையல் பாத்திரங்களை சுவரில் தொங்கவிடுவதன் மூலம் சமையலறையில் இடப்பற்றாக்குறையைக் குறைக்கவும், தேவைப்படும் போது பாத்திரங்களை எளிதாக எடுத்துப் பயன்படுத்தவும் முடிந்தது.
இதற்குப் பின்னால் மிகவும் நுட்பமான அறிவியல் காரணங்களும் உள்ளன. உலோகப் பாத்திரங்கள் வெப்பத்தை எளிதில் கடத்தக்கூடியவை. அடுப்பிலிருந்து வரும் வெப்பம் கைப்பிடி வழியாகப் பரவும். கைப்பிடியின் நுனியில் ஒரு துளை இருப்பதன் மூலம், அங்கு உலோகத்தின் நிறை குறைகிறது. இதனால் வெப்பம் அந்த இடத்திற்குச் செல்வது கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், அந்தத் துளை வழியாகக் காற்று செல்வதால் கைப்பிடி சூடாகாமல் விரைவாகக் குளிர உதவுகிறது.
சமீப காலங்களில் இணையத்தில் வைரலான, பலரும் அறியாத ஒரு சுவாரசியமான பயன்பாடு என்னவென்றால், சமையல் செய்யும் போது பயன்படுத்தும் கரண்டியை அந்தத் துளையில் சொருகி வைக்கலாம். சமைக்கும் போது கரண்டியைச் சமையல் மேடையில் வைத்தால் மேடை அழுக்காகும். ஆனால், இந்தத் துளையில் கரண்டியைச் செங்குத்தாகச் சொருகி வைக்கும்போது, கரண்டியில் ஒட்டியிருக்கும் உணவு அல்லது எண்ணெய் நேராக மீண்டும் பாத்திரத்திற்குள்ளேயே சொட்டும். (குறிப்பு: உங்கள் கரண்டியின் பிடி அந்தத் துளையின் அளவிற்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்).
இனி நீங்கள் சமைக்கும்போது, பயன்படுத்திய கரண்டியை மேடை மீது வைக்காமல், கைப்பிடித் துளையில் சொருகி வைத்துப் பாருங்கள்!
from Vikatan Latest news https://ift.tt/cynblLu
0 Comments