'எங்கக்கிட்ட 11 ஆபத்தான ப்ளேயர்ஸ் இருக்காங்க' என பிரஸ்மீட்டில் பேசியிருந்தார் டேரன் சமி. அந்த அபாயமானவர்கள் கொடுத்த சவாலை திறம்பட எதிர்கொண்டு ஈடன் கார்டனில் சாதித்திருக்கிறது இந்திய அணி. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடி இந்தியாவை அரையிறுதிக்குள் அழைத்து சென்றிருக்கிறார் சாம்சன். இந்திய அணி எப்படி வென்றது?
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்தான் டாஸை வென்றிருந்தார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துவிட்டார். சாய் ஹோப்பும், ரஸ்டன் சேஸூம் ஓப்பனிங் இறங்கியிருந்தார்கள். இந்திய அணிக்கு முதல் சில ஓவர்களில் எதுவுமே சரியாக அமையவில்லை. அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரிலேயே ஒரு எளிமையான ரன் அவுட் வாய்ப்பை வருண் சக்கரவர்த்தி மிஸ் செய்திருந்தார்.
அதேமாதிரி, பும்ரா வீசிய 5 வது ஓவரில் சேஸூக்கு அபிஷேக் சர்மா மிக எளிதான ஒரு கேட்ச்சை கோட்டவிட்டார். வெஸ்ட் இண்டீஸின் அதிரடியான பேட்டிங் டெப்த்க்கு பவர்ப்ளேயில் விக்கெட்டே விடாமல் இருப்பது பெரும் பலமாக மாறிவிடும் ஆபத்து உண்டு. ஆனால், இந்திய அணி மிடில் ஓவர்களில் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தது வரிசையாக விக்கெட்டுகளையும் எடுத்தது. கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்த ஹோப்பை 32 ரன்களில் ஒரு கூக்ளியில் போல்டாக்கினார் வருண் சக்கரவர்த்தி.
பும்ரா வீசிய 12 வது ஓவர் கேம் சேஞ்சராக இருந்தது. ஏனெனில், ஹெட்மயர் வந்த வேகத்தில் சிக்சரும் பவுண்டரியுமாக அடித்து 12 பந்துகளில் 27 ரன்களை அடித்து வைத்திருந்தார். ஹெட்மயர் ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்தத் தொடரில் 205 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். அதனால் ஸ்பின்னருக்கு கொடுக்காமல் பும்ராவை இடையில் கொண்டு வந்தார் சூர்யா. ஓவர் தி விக்கெட்டில் வந்த பும்ரா டைட்டான லைனில் வீசி ஹெட்மயரை எட்ஜ் எடுத்தார். அதே ஓவரில் செட்டில் ஆகியிருந்த சேஸையும் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸின் வேகம் குறைந்தது. 200 யை எட்டுவது சந்தேகமானது.
ஆனால், ஹோல்டரும் பவலும் கடைசியில் அதிரடி காட்டி சவாலான ஸ்கோருக்கு அழைத்து சென்றனர். அர்ஷ்தீப் சிங் வீசிய 16 வது ஓவரில் மட்டும் 24 ரன்களை சேர்க்க காரணமாக இருந்தார் பவல். வருண் வீசிய அடுத்த ஓவரில் ஹோல்டர் சிக்சர் பவுண்டரியோடு 14 ரன்களை சேர்க்க உதவினார். பெரிய ஓவர்களுக்கு நடுவே அர்ஷ்தீப் வீசிய 19 வது ஓவர் இந்திய அணிக்கு ஆசுவாசத்தை கொடுத்தது. இரண்டு ஹார்ட் ஹிட்டர்கள் க்ரீஸில் இருந்தும் அந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே வந்தது. 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்களை சேர்த்திருந்தது.
இந்திய அணிக்கு 196 ரன்கள் டார்கெட். டி20 உலகக்கோப்பைகளில் இந்திய அணி சேஸ் செய்த அதிகபட்ச டார்கெட்டே 173 தான். அதனாலயே இந்த டார்கெட் ரொம்பவே பெரிதாக தெரிந்தது. அதற்கேற்ப வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் பவர்ப்ளேயில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அபிஷேக்குகாக ஸ்பின்னரான அகீல் ஹொசனை வைத்து ஆரம்பித்தது வெஸ்ட் இண்டீஸ். முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. அகீல் ஹொசைன் வீசிய 3 வது ஓவரில் ஸ்ட்ரைக்கை எடுத்துக் கொண்டு பவுண்டரி சிக்சர் என விளாசி 17 ரன்களை சேர்த்தார் சாம்சன். அதன்பிறகும் பேட்டை சுழற்றி அவுட்டாகி சென்றார் அபிஷேக்.
இஷான் கிஷன் ஹோல்டரின் குட் லெந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று நேராக டீப் லெக்கில் கேட்ச் ஆனார். பவர்ப்ளேயில் இந்திய அணி 53-2 என இருந்தது. மிடில் ஓவர்களில் சாம்சன் சேஸை அழகாக முன்னெடுத்து சென்றார். ஓவருக்கு ஓவர் பவுண்டரியோ சிக்சரோ அடித்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ரன்ரேட் பிரஷரை கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார். சூர்யா கொஞ்சம் சப்போர்ட் செய்துவிட்டு சமார் ஜோசப்பின் பந்தில் அவுட் ஆனார். திலக் வர்மா அதிரடியாக 15 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து சாம்சனுக்கு அழுத்தம் ஏறாமல் உதவி ஹோல்டரின் பந்தில் அவுட் ஆனார். நேரம் செல்ல செல்ல காற்றில் ஈரப்பதமும் அதிகமானது. வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் தடுமாறினர். ஹோல்டர் ஹர்திக்கின் கேட்ச்சையெல்லாம் ட்ராப் செய்தார்.
கடைசி 2 ஓவர்களில் இந்திய அணிக்கு 17 ரன்கள் தேவை எனும் சூழல். இந்திய அணி எளிதில் வெல்லும் என நினைக்கையில் சமார் ஜோசப்பின் பந்தில் ஹர்திக் ஹோல்டரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்தியா மீதும் அழுத்தம் ஏறியது. சிவம் துபே வந்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்தார். அடுத்த பந்து டாட். சமார் ஜோசப்பின் யார்க்கர்களை துபே சரியாக இடைவெளியில் கனெக்ட் செய்தார். இன்னொரு பவுண்டரி. விளைவு, கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே தேவை. சாம்சனும் களத்தில் நின்றார். ரொமாரியோ ஷெப்பர்ட் கடைசி ஓவரை வீசினார். யார்க்கராக இறக்க நினைத்தார். நன்றாக செட்டில் ஆகியிருந்த சாம்சன் எந்த பதட்டமும் இல்லாமல் ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் பறக்கவிட்டு முதல் இரண்டு பந்துகளிலேயே போட்டியை முடித்துவிட்டார். சாம்சன் 97 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
இப்படி ஒரு இன்னிங்ஸ்தான் முக்கியமான கட்டத்தில் சாம்சனிடமிருந்து வராமலே இருந்தது. அதனாலேயே எப்போதுமே அவர் முதல் ஆப்சனாக இருந்ததே இல்லை. ஆனால், இந்த முறை இந்திய அணிக்கு தேவைப்பட்ட தருணத்தில் பொறுப்பை சுமந்து ஆடி ஆட்டநாயகனாக மாறி நிற்கிறார். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. அரையிறுதியில் மும்பையில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
from Vikatan Latest news https://ift.tt/a2ADSp7
0 Comments