சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரி விஜய் கடிதம் கொடுத்திருந்தார். இந்நிலையில், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த கான்வாய் பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டிருக்கிறது.

தவெகவுக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இல்லை. அவர்களிடம் 108 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து விஜய் காங்கிரஸின் ஆதரவையும் கோரியிருந்தார். காங்கிரஸூம் தவெகவுக்கு தங்களின் முழு ஆதரவையும் வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார்.
ஆனால், ஆளுநர் தரப்பில் விஜய்யிடம் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்களின் பட்டியலை வழங்குமாறு கேட்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் நேற்று மாலையிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் தீயாய் பரவியிருந்தது. அதாவது திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கப் போவதாகவும் அதற்கான வேலைகள் திரைமறைவில் வேகமாக நடப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களாலும் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக விஜய்க்கு வழங்கப்பட்ட முதல்வருக்கான கான்வாய் பாதுகாப்பு நள்ளிரவு முதல் விலக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். விஜய் தனது பட்டினப்பாக்கம் அலுவலகத்திலிருந்து நீலாங்கரை வீட்டிற்கு கான்வாய் பாதுகாப்பின்றியே சென்றிருக்கிறார்.
இந்நிலையில், இன்று திமுக - அதிமுக இடையேயான உடன்பாடு பற்றி அடுத்தக்கட்ட நகர்வுகள் தெரியவரும் எனத் தகவல்.
from Vikatan Latest news https://ift.tt/sz5k8fD
0 Comments