விகடன் சினிமா விருதுகள் 2025 விழா மேடையில், 'காந்தா' படத்துக்காக, சிறந்த குணச்சித்திர நடிகர் விருதைப் பெற்றார் நடிகர் சமுத்திரக்கனி. இவருக்கு விருதை வழங்கி, சிறப்பித்தவர் நடிகர் இந்திரன்ஸ்.
நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, ``10 வருஷம் ஆச்சு. நாமளும் நடிச்சிக்கிட்டே இருக்கோமே, எல்லா இடத்துலயும் நாமினேஷன் குடுக்குறாங்க. அப்புறம் கடைசில இல்லைன்றாங்கன்னு தோணிக்கிட்டே இருந்துச்சு. இப்போ கிடைச்சுடுச்சு. நன்றி விகடன்.

விகடனுக்கும் எனக்குமான தொடர்பு 30 வருஷமா இருக்கு. 2003-ல 'அலைகள்' சீரியல்ல வேலை பண்ணும்போது, விகடன் எம்.டி சீனிவாசன் சார் 'நாம ஒண்ணு பண்ணலாமா?'ன்னு கேப்பாரு. சார், இப்பவும் நான் ரெடியா இருக்கேன் சார்! பேரன்பு கொண்ட இந்திரன்ஸ் சார் கிட்ட இந்த அவார்ட வாங்குறது கடவுள் கையால வாங்குற மாதிரி பெருமையா இருக்கு.
இப்போ 'அரசன்' ஷூட்டிங் போய்க்கிட்டு இருக்கு, முடிஞ்ச உடனே 'வடசென்னை 2' வரும். இந்த ஆண்டு இறுதியில 'ராஜன் வகையறா' வந்துடும்.
பாரதிராஜா சார் கிட்டதான் சேரணும்னு நினைச்சேன். ஆனா பாலச்சந்தர் சார் கதவு திறந்தது.
பாலச்சந்தர் சாரின் நூறாவது படம். இலங்கையில் ஷூட்டிங். காலையில் எப்போதும் இயக்குநரின் அறை வாசலில் சென்று நிற்பேன். சொன்ன நேரத்துக்குச் சரியாக வெளியே வருவார்.
ஒருநாள் காலை 8 மணிக்கு அவர் அறையின் வெளியே நின்றேன். அன்று கதவு திறக்கவே இல்லை. 10 நிமிடங்கள் கழித்து நானே கதவைத் தட்டிவிட்டேன். உள்ளே இருந்து 'யெஸ்' என ஒரு குரல். முறையாகச் சட்டையை இன் செய்து கிளம்பி, குறுக்கும் நெடுக்குமாக இயக்குநர் நடந்துகொண்டிருந்தார். 'என்ன சார்...' என்றேன்.

'அந்த முதல் ஷாட் நல்லா வந்துடணும்டா...' என்றார். 'நூறாவது படம் சார்...ஏன் பயம்?' என்றேன். 'அந்த பயம் இருக்குற வரைக்கும்தாண்டா சினிமாவுல இருக்க முடியும்' 'அடுத்த ஷாட் பயம் இருக்குற வரைக்கும்தான் இண்டஸ்ட்ரில இருப்பே'ன்னு சொன்னாரு.
ஒரு ஷாட் ஓகே ஆனதும் 'I got it'னு சொல்ற அந்த முகத்தை மறக்க முடியாது.
டைரக்டர் நம்பரை இன்னும் 'டைரக்டர்'னே போன்ல வெச்சிருக்கேன். குருவா பார்த்தா குரு, நண்பனா பார்த்தா நண்பன், அப்பாவா பார்த்தா அப்பா!" என்று கூறினார்.

from Vikatan Latest news https://ift.tt/rDa6yId
0 Comments