Doctor Vikatan: எனக்குக் கடந்த சில மாதங்களாக கண்ணில் கறுப்புப் புள்ளிகள் அல்லது பூச்சிகள் பறப்பது போல் தெரிகிறது. இது அவ்வப்போது தோன்றுகிறது... பிறகு தானாக மறைகிறது. இந்தப் பிரச்னையயால் கண் பார்வை பாதிக்கப்படுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண்ணில் பூச்சி பறப்பது போல் தோன்றுவதை 'விட்ரியஸ் ஃப்ளோட்டர்ஸ்' (Vitreous floaters) என்று சொல்வோம். நம் கண்ணின் லென்ஸ் (Lens) மற்றும் விழித்திரைக்கு (Retina) இடையே ஜெல்லி போன்ற ஒரு பொருள் இருக்கும். இதற்குப் பெயர் தான் விட்ரியஸ். இந்த விட்ரியஸ் பகுதியில் செல்கள் (Cells) இருக்கும் போது, நாம் கண்ணை மேலேயும் கீழேயும் பார்க்கும் போது அது பூச்சி பறப்பது போலத் தெரியும்.
நீல நிற ஆகாயத்தைப் பார்க்கும் போதோ அல்லது வெள்ளை நிறப் பின்னணியைப் (White background) பார்க்கும் போதோ இந்த ஃப்ளோட்டர்ஸ் செல்கள் நமக்கு மிகவும் தெளிவாகத் தெரியும். இவை பூச்சி பறப்பது போலவோ அல்லது ஒரு நூல் வடிவத்திலோகூட இருக்கலாம்.
அதிக மைனஸ் பவர் உள்ள மயோபியா (Myopia) குறைபாடு கொண்டவர்களுக்கு இந்த ஃப்ளோட்டர்ஸ் ஏற்படுவது மிகவும் பொதுவானது. ஏனெனில், இவர்களுக்கு விட்ரியஸானது ஜெல்லி போன்ற அமைப்பில் இல்லாமல் திரவ வடிவில் இருக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கும் இந்த விட்ரியஸ் பகுதியானது திரவ வடிவில் மாறுவதால், ஃப்ளோட்டர்ஸ் ஏற்படுவது சாதாரணமாகும். கண்ணில் ஏதேனும் நோய் பாதிப்புகள் அல்லது கோளாறுகள் இருந்தாலும் இவை ஏற்படலாம்.

விழித்திரையில் ஏற்படும் கிழிசல் (Retinal tear), சர்க்கரை நோய் (Diabetes) போன்ற காரணங்களால் கண்ணின் விழித்திரையில் ஏற்படும் ரத்தக்கசிவு (Bleeding in the eye/Retina) அல்லது ரெட்டினோபதி (Retinopathy) ஆகியவற்றாலும் இப்படி ஏற்படலாம்.
மயோபியா போன்ற குறைபாடுகள் உள்ளவர்களுக்கு இந்த ஃப்ளோட்டர்ஸ் எப்போதாவது தோன்றி மறைந்துவிடும், இதனால் பெரிய பாதிப்பில்லை. ஆனால், திடீரென்று அதிகப்படியான ஃப்ளோட்டர்ஸ் ஏற்பட்டு, கண்ணுக்கு முன்னால் பயங்கரமாகப் பூச்சி பறப்பது போல் தோன்றினால், உடனடியாக கண் மருத்துவரை அணுகிப் பரிசோதிக்க வேண்டும். மருத்துவர் உங்கள் கண்ணில் மருந்து ஊற்றி, விழித்திரையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்று பார்ப்பார்.
விழித்திரையில் ஏதேனும் கிழிசல் அல்லது ரத்தக்கசிவு இருந்தால், அதை லேசர் (Laser) சிகிச்சை மூலம் சரிசெய்வார்கள். திடீரென அதிக அளவில் ஃப்ளோட்டர்ஸ் தோன்றுவதற்கு மற்றுமொரு முக்கியக் காரணம் விழித்திரை விலகல் (Retinal detachment) ஆகும். இந்தப் பாதிப்பு ஏற்படும்போது, கண்ணின் முன்னால் சாம்பல் நிறத் திரை (Grey curtain) மறைப்பது போன்ற உணர்வு ஏற்படும். எனவே, உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

சாதாரணமாக இந்த ஃப்ளோட்டர்ஸை நீக்குவதற்கு 'ஃப்ளோட்ரெக்டமி' (Floaterectomy) என்ற அறுவை சிகிச்சை முறை உள்ளது. ஆனால், இது அந்தளவுக்கு வெற்றிகரமான சிகிச்சை முறை கிடையாது. விழித்திரையில் தீவிரமான பாதிப்புகள் இருந்தால், அதாவது விழித்திரை விலகல், ரத்தக்கசிவு அல்லது விழித்திரைக் கிழிசல் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதற்கு 'விட்ரெக்டமி' (Vitrectomy) என்ற அறுவை சிகிச்சை செய்யப்படும். இந்த அறுவை சிகிச்சையின் மூலம் கண் பாதிப்புகள் முழுமையாகச் சரிசெய்யப்படும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/M50gYHj
0 Comments