வாழ்க்கை என்பது நாம் காணும் உலகத்தில் இல்லை, நாம் சிந்திக்கும் விதத்தில்தான் இருக்கிறது. அப்படி நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றக்கூடிய இந்தப் அற்புதமான பொன்மொழி புத்தர் சொன்னது. மிகச் சாதாரணமான வார்த்தைகளைக் கொண்டிருந்தாலும், இதனுள் அடங்கியுள்ள ஆழம் அளப்பரியது. நம் எண்ணங்கள் எப்படி நம்முடைய அடையாளமாக மாறுகிறது என்பதை உணர்ந்துகொண்டால், எந்தவொரு தடையையும் நம்மால் எளிதாகத் தகர்க்க முடியும்.

ஒரு இளைஞன் தன் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, தினமும் தனது அலுவலகத்திற்கு மிதிவண்டியில் செல்வது என்று முடிவெடுத்தான். தினமும் சென்று வரச் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். முதல் சில நாட்கள் மிகுந்த உற்சாகத்துடன் சென்றான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவனுக்குச் சோர்வு ஏற்பட்டது.
ஒரு நாள், வழியில் இருந்த ஒரு சிறிய மேடான பகுதியில் சைக்கிளை மிதிக்கும்போது அவனது மனம், "இது மிகவும் கடினம், என்னால் தினமும் இவ்வளவு தூரம் பயணிக்க முடியாது, என் கால்களில் வலுவில்லை" என்று எண்ணத் தொடங்கியது. அவன் மனம் அப்படி நினைத்த மறுகணமே, அவனது கால்கள் தளர்ந்தன, மூச்சு வாங்கியது, அந்தச் சிறிய ஏற்றம் கூட அவனுக்கு ஒரு பெரிய மலையாகத் தெரிந்தது. அன்றோடு சைக்கிள் ஓட்டுவதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தான்.
அப்போது அவனது உடற்பயிற்சியாளர் அவனிடம் ஒரு ஆலோசனையைக் கூறினார். "உன் உடலுக்குத் தேவையான புரதச்சத்தும், கால்சியமும் உனது உணவில் சரியாகவே இருக்கிறது. உன் தசைகள் வலுவாகத்தான் உள்ளன. ஆனால் உன் மனதிற்குத் தேவையான நேர்மறை எண்ணங்கள் தான் குறைகின்றன. நீ பலவீனமானவன் என்று நீயே நினைத்தால், உன் உடலும் அதை அப்படியே நம்பிவிடும்" என்றார்.
அடுத்த நாள், அந்த இளைஞன் தன் எண்ணத்தை முழுமையாக மாற்றிக் கொண்டான். வண்டியில் ஏறும்போதே, "நான் வலிமையானவன். ஒவ்வொரு முறை நான் பெடல் செய்யும்போதும் என் உடல் ஆரோக்கியமாகிறது. இந்தப் பயணம் எனக்கு சுமை அல்ல, என் உடலை உறுதிப்படுத்தும் பயிற்சி" என்று தன் மனதிற்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே பயணத்தைத் தொடங்கினான்.

அதே சாலை, அதே மிதிவண்டி, அதே உடல்... ஆனால் அன்று அந்தப் பயணம் அவனுக்குச் சுமையாகத் தெரியவில்லை. உடல் சோர்வடையவில்லை. மிக எளிதாக அந்த மேட்டைக் கடந்து சென்றான்.
நம்முடைய வெற்றியும் தோல்வியும் நம்முடைய உடல் பலத்திலோ, வெளியுலகச் சூழ்நிலைகளிலோ இல்லை; அது நம் மனதில் தான் இருக்கிறது. ஒரு செயலைத் தொடங்கும் முன்பே "இது எனக்கு வராது", "நான் தோற்றுவிடுவேன்" என்று நினைத்து நம் முழுத் திறனையும் முடக்கி விடுகிறோம். நாம் நம்மை ஒரு வெற்றியாளராக, தன்னம்பிக்கை மிக்கவராக நினைத்தால், நம் செயல்களும் அதற்கேற்ப மாறி, நம்மை அந்த நிலைக்கு உயர்த்தும்.
நல்லதையே நினைப்போம். `முடியாது’ என்ற வார்த்தையை அகற்றிவிட்டு, `என்னால் முடியும்’ என்று நம்புவோம்.
from Vikatan Latest news https://ift.tt/vdA9eKi
0 Comments