`மகள்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்' - மனைவியின் உறவு; மகள்களை கொன்று, தற்கொலைக்கு முயன்ற கணவர்

ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியவர், தன் இரண்டு மகள்களை கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

பெங்களூருவில் உள்ள பிலால் நகரைச் சேர்ந்தவர் இம்ரான். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவருக்கு திருமணமாகி மனைவியும்,10 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இவர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் 4 வது மாடியில் அறை எடுத்து இரு மகள்களுடன் தங்கினார். மறுநாள் அறையை காலி செய்வதாக கூறியிருந்த நிலையில், அறை நீண்டநேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அறையைத் திறந்தபோது அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது.

கட்டிலில் இரு குழந்தைகள் மயங்கிய நிலையிலும், இம்ரான் கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் கிடந்தனர். உடனே இதுபற்றி போலீசாருக்கு ஹோட்டல் நிர்வாகத்தினர் தகவல் கொடுக்க, விரைந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

செல்லும் வழியிலேயே இரண்டு சிறுமிகளும் பரிதாபமாக இறந்தனர். இம்ரானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், இம்ரானின் மனைவிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்துள்ளதை அறிந்த நிலையில், இம்ரானுக்கும் அவர் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. வாலிபருடனான தொடர்பை துண்டித்துக்கொள்ள கேட்டுக்கொண்டும் மனைவி அதை பொருட்படுத்தாமல் நட்பைத் தொடர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த இம்ரான், இரு மகள்களையும் அழைத்து வந்து ஹோட்டலில் தங்கியுள்ளார். மகள்களை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. மேலும், அந்த அறையில் கைப்பற்றப்பட்ட இம்ரான் எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில், "என் மனைவியின் திருமணத்திற்கு புறம்பான உறவால் எனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. அவளது செயலை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் உள்ளது. ஆனாலும், அவள் என்னை காயப்படுத்திவிட்டாள். அதனால் என் மகள்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



from Vikatan Latest news https://ift.tt/rahRGSf

Post a Comment

0 Comments