மதுரை மாநகர் சிந்தாமணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சிவனடியார் பரமசிவம்.
இவர் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்தார்.
காவல்துறையினர் தாக்கியதால்தான் பரமசிவம் இறந்து போனார் என அவருடைய மனைவி அய்யம்மாள் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் காவல்துறையிடம் கொடுத்த புகாரில், “கடந்த ஜூலை 16-ஆம் தேதி, எங்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாகை கிருஷ்ணன் என்பவருக்கும் வாகனம் நிறுத்துவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது.
இந்த மோதலில் எனக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்.
ஆனால், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களாகிய எங்களையே காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த என்னை நள்ளிரவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யுமாறு காவலர் ஒருவர் மிரட்னார்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 19-ஆம் தேதி காலை எனது கணவர் பரமசிவத்தை காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு ஆய்வாளர் விஜயபாஸ்கர் முன்னிலையில், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் ஆனந்த் மற்றும் அடையாளம் தெரியாத இரு காவலர்கள் சேர்ந்து, போலீஸ் மீது ‘காவல் கட்டுப்பாட்டு அறையிடம் புகார் தெரிவிக்கிறாயா’ எனக் கூறி பூட்ஸ் காலால் நான்கு பேரும் அவரைக் கடுமையாகத் தாக்கினர்.

இந்தத் தாக்குதலில் கணவர் பரமசிவம் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார், உடனே காவல்துறையினரே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துவிட்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறுமாறு காவல்துறையினர் தொடர்ந்து மிரட்டினர்.
இதன் பின்னர் காவல்துறையினர் தாக்கியதால் பரமசிவத்திற்குக் கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்ட நிலையில், ஜூலை 21-ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தோம்.
உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மீண்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள், அவரது தலையின் உள் பகுதியில் இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை அவசியம் எனத் தெரிவித்தனர்.
அந்த நேரத்திலும் காவலர் அப்துல் முஹமது மருத்துவமனைக்கு வந்து டிஸ்சார்ஜ் செய்யுமாறு மிரட்டினார். இதனால் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பரமசிவம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கணவர் பரமசிவம் உயிரிழந்தார்.
எனது கணவரின் உயிரிழப்புக்குக் காரணமானதாகக் கூறப்படும் சிந்தாமணி காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர், சார்பு ஆய்வாளர் ஜெயக்குமார் , காவலர்கள் ஆனந்தன், அப்துல் முஹமது மற்றும் அடையாளம் தெரியாத காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும் பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், “மதுரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று பரமசிவத்தின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி, தேவையான சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து, மரணத்துக்கான காரணம் குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும்.
மேலும், மதுரை, சிவகங்கை, தேனி அரசு மருத்துவமனைகளின் தடயவியல் துறைகளில் இருந்து தலா ஒரு மூத்த பேராசிரியரை நியமித்து, அறிவியல் அலுவலரின் உதவியுடன் இணைந்து பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டும்.
பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, அந்தப் பதிவு சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

சிந்தாமணி காவல் நிலையத்தில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞரை நீதிமன்ற ஆணையராக நியமிக்கிறோம். காவல் நிலையத்தில் சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளதா, அதற்கான அனுமதி உத்தரவு உள்ளதா உள்ளிட்ட விவரங்களை நேரில் ஆய்வு செய்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளைச் சேகரித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆய்வின்போது காவல்துறையினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/wuVY8eQ
0 Comments