Doctor Vikatan: தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமானால் முதல் குழந்தைக்குத் தாய்ப்பாலைத் தொடரலாமா?

Doctor Vikatan: ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்கும்போது கர்ப்பமான நிலையில், தனது முதல் குழந்தைக்கு (ஒன்றரை வயது) தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாமா... அவருக்கு தாய்ப்பால் சுரப்பும் இருக்கிறது. அவர் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த விரும்பினாலும் அவரால் நிறுத்த முடியவில்லை. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்? 

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி

முதல் குழந்தைக்கு ஒன்றரை வயது என்றால், தாய் மீண்டும் கர்ப்பமாகிவிட்டார் என்பதற்காக மட்டும் தாய்ப்பாலைத் திடீரென நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தாயும் குழந்தையும் விரும்பினால், சாதாரண இணை உணவுகளுடன் 2 வயது வரை அல்லது அதற்கு மேலும்கூட தாய்ப்பால் கொடுக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.   

இரண்டாவது கர்ப்பத்தில் எந்தச் சிக்கலும் இல்லை, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்ற நிலையில், தாய் தன் மூத்த குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும்போது ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரப்பதால் கர்ப்பப்பையில் லேசான சுருக்கங்கள் (contractions ) ஏற்படலாம். இதனால் கருச்சிதைவு ஏற்படுமோ என்று பல பெண்கள் பயப்படுகிறார்கள். ஆனால்,  மருத்துவ ஆதாரங்களின்படி, சாதாரணமான, குறைந்த ரிஸ்க் உள்ள (low risk pregnancy) கர்ப்பத்தில், தாய்ப்பால் கொடுப்பதால் கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவத்தின் அபாயம் அதிகரிப்பதாகத் தெரியவில்லை.

கர்ப்பம் வளர வளர, தாய்ப்பாலின் அளவு படிப்படியாகக் குறையலாம். பாலின் சுவை மற்றும் தன்மையிலும் மாற்றம் ஏற்படலாம். பின்னர் அது சீம்பாலாக (colostrum) மாறத் தொடங்கும். இதனால் சில குழந்தைகள் தாங்களாகவே தாய்ப்பால் குடிப்பதைக் குறைத்துக் கொள்வார்கள் அல்லது நிறுத்திவிடுவார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த விரும்பினாலும், ஒன்றரை வயதுக் குழந்தையால் உடனடியாக நிறுத்த முடியவில்லை என்றால் திடீரென நிறுத்தாமல் படிப்படியாகக் குறைப்பது நல்லது. குழந்தை கேட்காத நேரங்களில் தானாகவே தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

விளையாட்டு, உணவு போன்றவற்றால் குழந்தையின் கவனத்தை மாற்றலாம். குறிப்பாக, இரவு தூங்கும்போது மற்றொரு குடும்ப உறுப்பினர் குழந்தையைத் தூங்க வைக்க உதவலாம். 18 மாதக் குழந்தைக்கு முக்கிய ஊட்டச்சத்துகள் பலவகையான ஆரோக்கியமான  உணவுகளிலிருந்தும் கிடைக்க வேண்டும்.

கர்ப்பத்துடன் தாய்ப்பாலும் கொடுப்பதால் தாயின் ஊட்டச்சத்து தேவை அதிகமாக இருக்கலாம். குறிப்பாக, ரத்தச்சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

இந்தக் காலத்தில் தாய் தனது உணவிலும் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். போதுமான கலோரி, புரதம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பிற நுண்ணூட்டச் சத்துகள் (micro nutrients) கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். கர்ப்பத்துடன் தாய்ப்பாலும் கொடுப்பதால் தாயின் ஊட்டச்சத்து தேவை அதிகமாக இருக்கலாம். குறிப்பாக, ரத்தச்சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள  வேண்டியது மிக அவசியம்.

ஆனால், அதிக ரிஸ்க் உள்ள கர்ப்பம் என்று மருத்துவர் சொல்லியிருந்தலோ, ரத்தப்போக்கு, வலியுடன் அடிக்கடி கர்ப்பப்பை சுருக்கம் ஏற்படுதல், குறைப்பிரசவ அபாயம் அல்லது வேறு முக்கியமான கர்ப்பகால சிக்கல்கள் இருந்தாலோ, தாய்ப்பாலைத் தொடரலாமா என்பது குறித்து மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசித்து தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய வேண்டும்.
ஆக, கர்ப்பமாக இருப்பது மட்டுமே தாய்ப்பாலை நிறுத்த வேண்டிய காரணம் அல்ல. கர்ப்பம் சிக்கலின்றி இருந்தால், தாயும் குழந்தையும் விரும்பும்வரை தாய்ப்பாலைத் தொடரலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    



from Vikatan Latest news https://ift.tt/uUoBYMp

Post a Comment

0 Comments