`தாய், தந்தைக்கு சல்யூட் அடித்து பதவியேற்ற கன்னியாகுமரி எஸ்.பி' - போலீஸார் நெகிழ்ச்சி!

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த பத்ரி நாராயணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து, சென்னை தி.நகர் துணை கமிஷனராக இருந்த ஹரி கிரன் பிரசாத் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். ஹரி கிரன் பிரசாத் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தின் 52-வது எஸ்.பி-யாக பொறுப்பேற்றுக்கொண்டார். நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அவரின் தந்தை நரசிம்மலு, தாய் கஸ்தூரி ஆகியோரும் வந்திருந்தனர். பதவியேற்புக்கு முன்னதாக ஹரிகிரன் பிரசாத் தன் தாய் தந்தையருக்கு சல்யூட் அடித்து பெற்றோருக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வு அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை நெகிழ்ச்சியடைய செய்தது.

குமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத்

குமரி எஸ்.பி-யாக பொறுப்பேற்றுள்ள ஹரிகிரன் பிரசாத், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர். சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஹைதராபாத் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி-யில் படித்துள்ளார். 2016-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். திருச்சியில் பயிற்சி ஏ.எஸ்.பி-யாகவும், வள்ளியூரில் ஏ.எஸ்.பி-யாகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் பதவி உயர்வு பெற்று, சென்னை தி.நகர் துணை கமிஷனராக பதவி வகித்தார். இந்த நிலையில், தற்போது முதன்முறையாக மாவட்ட எஸ்.பி-யாக, குமரி மாவட்டத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

குமரி எஸ்.பி-யாக பொறுப்பேற்ற பின்னர் ஹரி கிரன் பிரசாத் கூறுகையில், ``கன்னியாகுமரி மாவட்டம், நமது நாட்டின் மிக முக்கியமான பகுதி ஆகும். இந்த மாவட்டத்தில் எஸ்.பி-யாக பொறுப்பேற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/DlE54oB

Post a Comment

0 Comments