என் டீன் ஏஜ் வயது மகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பேன்,ஈறு தொல்லை இல்லாமலிருந்தது. இப்போது பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதால் தினமும் பேன் தொல்லையோடு வீட்டுக்கு வருகிறாள். தலையில் அரிப்பும் அதிகமிருப்பதாகச் சொல்கிறாள். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏதேனும் இருக்கிறதா?
- கிரிஜா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்.
``பேன்கள் ஒருவரது தலையில் இருந்து இன்னொருவரது தலைக்குப் பரவும் தன்மை கொண்டவை. பேன்களுக்கு மனித ரத்தம்தான் உணவு. ஈறு, பேன் பிரச்னை இருந்தால் தலையில் அரிப்பும் அதிகமாகவே இருக்கும். பேன்கள் தன் வாழ்நாளான ஒரு மாதத்தில் தினமும் 7 முதல் 10 முட்டைகள்வரை ஈணும். அவற்றைத்தான் ஈறுகள் என்கிறோம். அவையே பேன்களாக உருமாறுகின்றன. பேன்கள் ஊசி போன்ற வாய்ப்பகுதியால் தலையின் சருமத்தில் துளை போட்டு, ரத்தத்தை உறிஞ்சி உணவாக்கிக் கொள்ளும். பேன்களும் ஈறுகளும் ரத்தத்தை உறிஞ்சி, தமது உமிழ்நீரை உள்ளே செலுத்தும். அதன் விளைவால் அரிப்பும், பாக்டீரியா தொற்றும் ஏற்படும். பேன்கள் அரிதாக சிலருக்கு கொப்புளங்கள் நிறைந்த சரும நோயையும், சீழ்க் கட்டிகளையும்கூட ஏற்படுத்தும்.
மெடிக்கேட்டடு ஷாம்பூ உபயோகித்து பேன், ஈறுகளை விரட்டுவது மிகவும் பரவலான சிகிச்சை. ஈறுகளை நீக்கவென்றே கிடைக்கிற சீப்புகளை வைத்து அவற்றை அகற்றலாம். பள்ளி, கல்லூரி சென்று திரும்பும் குழந்தைகளின் தலையை தினமும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஈறுகளோ பேன்களோ தென்பட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
ஆரம்பத்திலேயே கவனிப்பதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் அடுத்தவருக்குப் பரவாமல் தடுப்பதும் எளிதாகும். விதை நீக்கிய 10 வேப்பம்பழங்களை எடுத்து, அவற்றை மூழ்கும் அளவு தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சவும்.
வெதுவெதுப்பான சூடாக இருக்கும்போதே அந்த எண்ணெயை பஞ்சில் தொட்டு, பேன், ஈறுகள் உள்ள இடங்களில் தேய்த்து அப்புறப்படுத்திவிடவும். பின்னர் வேப்பிலை, துளசி, பூந்திக் கொட்டை சேர்த்தரைத்த சீயக்காய்த்தூள் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும். இதை வாரம் ஒன்றிரண்டு முறை செய்யலாம். எந்தச் சிகிச்சைக்கும் கட்டுப்படாத பேன், ஈறு பிரச்னைக்கும், அதிகமான அரிப்புக்கும் மருத்துவ ஆலோசனை அவசியம்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
from Latest News https://ift.tt/ocum5U0
0 Comments