திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு பகுதியை அடுத்த குருக்கலையான்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவர் அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு, தோட்டத்து வீட்டில் தன் தாய் சௌந்தரம்மாள்(60) உடன் தங்கினார். அதையடுத்து நேற்று காலை அவரது தோட்டத்து வீட்டுக்கு பால் கறப்பதற்காக பால்காரர் வந்து பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தனர்.
இதுகுறித்து எரியோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் ரூபேஸ் குமார் மீனா, மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன், வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்திற்கு உடனடியாக வந்து விசாரணையை தொடங்கினர். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் துறை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் யார் என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி நடந்தது.
விசாரணையில், உயிரிழந்த செல்வராஜின் மனைவி சுபஹாசினி, கோபிகிருஷ்ணன் என்பருவருடன் பழகி வந்ததும், இருவரும் பணத்திற்காக திட்டம் போட்டு, செல்வராஜ் அவர் தயார் சுந்தரம்மாள் இருவரையும் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்கள் கொலைக்கு பயன்படுத்திய ஆயுங்கள், வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணம் மீறிய உறவின் காரணமாக, கணவனையும், மாமியாரையும் மருமகள் திட்டம் போட்டு கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from Latest News https://ift.tt/wzaGpoJ
0 Comments