விழுப்புரம்: பெண் அதிகாரி Vs விசிக மாவட்ட செயலாளர்; உச்சக்கட்ட வாக்குவாதம் - பின்னணி என்ன?

விழுப்புரம் வடக்கு மாவட்ட வி.சி.க செயலாளராக இருப்பவர் சேரன். இவரின் மனைவி ஷீலாதேவி தற்போது விழுப்புரம் மாவட்ட துணைச் சேர்மனாக இருக்கிறார். அரசியல் பின்புலம் மட்டுமின்றி, அரசு ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வந்துள்ளார் சேரன். இந்நிலையில், விழுப்புரம் தாட்கோ அலுவலக செயற்பொறியாளர் அன்பு தேவகுமாரியிடம்... இவர், ஆதரவாளர் சிலருடன் சென்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும்; பெண் செயற்பொறியாளர், இந்நபரை ஒருமையில் பேசி மேசையின் மீது இருந்த ஒரு பொருளை ஆக்ரோஷமாக எடுக்கும் மற்றொரு வீடியோ காட்சியும்... 19ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

CSR report

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தான் செய்துவரும் பள்ளி கட்டட ஒப்பந்தப்பணி குறித்து சேரன் தனது ஆதரவாளர்களுடன் சென்று பெண் செயற்பொறியாளரிடம் பேசினாராம். அப்போது, சேரனுக்கும் பெண் அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், இந்த கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 11-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள், 19-ம் தேதி வெளியாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

வாக்குவாதம் நடைபெற்ற மறுதினமே, பெண் அரசு அதிகாரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் எழுத்துபூர்வமாக புகார் மனு அளித்துள்ளார். சி.எஸ்.ஆர் மட்டுமே பதிந்த காவல்துறை அதிகாரிகள், இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி அனுப்பி வைத்தனராம்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்க பெண் செயற்பொறியாளரிடம் பேச முயற்சித்தபோது, "இது குறித்துப் பேசுவதற்கு விருப்பமில்லை" என கூறி மறுத்துவிட்டார்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலையம்

அதனைத் தொடர்ந்து வி.சி.க விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரனிடம் விளக்கம் கேட்டோம். "அன்று நான், கட்சி சார்ந்து அந்த அலுவலகம் செல்லவில்லை. முதல்நிலை ஒப்பந்ததாரராக தான் சென்றேன். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்கு உட்பட்ட சேமக்கோட்டை பகுதியில் ஆதிதிராவிட அரசு ஆரம்பப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு வகுப்பறைகளை கட்டி வருகிறேன். இந்த கட்டடத்தின் இறுதிகட்ட பணியாக டைல்ஸ் போட வேண்டியிருந்தது. அதற்காக இந்த அதிகாரியிடம் முறையாக அனுமதி பெற்று, அவர் கூறிய டைல்ஸை வாங்கி வந்தோம். இவர்களிடம் காண்பித்தபோது, "சரி போடுங்கள்" எனக்கு கூறிவிட்டார்.

ஆனால், டைல்ஸ் போடும் தினத்தன்று ஒரு 'டெக்னிக்கல் அசிஸ்டென்'டையும் அங்கு அனுப்பியிருந்தார். அதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்காதவர், டைல்ஸ் போடும் பணி முடிந்ததும் "இந்த டைல்ஸ் சரியில்லை' என்று கூறினார். மேலும், நான் செய்யும் பணியில் போர்வெல் போடும் வேலை மட்டுமே பாக்கி இருந்தது. அதற்கான அளவீட்டை அந்த அதிகாரிதான் தரவேண்டும். எனவே, கடந்த 11-ம் தேதியன்று அந்த அளவீட்டை கேட்பதற்காக தாட்கோ அலுவலகம் சென்றிருந்தேன். போர்வெல் போடுவதற்கான அளவை நான் கேட்டபோது, "நான் சொன்ன டைல்ஸை போடவில்லை. உனக்கு சொல்ல முடியாது" என்பதுபோல கூறிவிட்டார்கள். 'உங்களிடம் அனுமதி பெற்று, நீங்கள் சொன்னதை தானே மேடம் போட்டோம். இப்போது நீங்கள் இப்படிச்சொன்னால் எனக்கு நஷ்டம் ஏற்படும். எதுவாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள். நான் உங்கள் உயரதிகாரியிடம் பேசுகிறேன்' என்று சொன்னபோதே, "ச்சீ வெளியே போ" என்று மரியாதையின்றி சொன்னார்கள்.

பெண் அதிகாரி Vs வி.சி.க மாவட்ட செயலாளர்

அப்போது ஏற்பட்ட மன உலைச்சலில் நான் உணர்ச்சி வசப்பட்டு பேசியதோடு, 'நான் எதுக்கு வெளிய போகணும்... நீ வெளிய வா!' என்றேன். அப்போது, வாடா... போடா... என்றெல்லாம் பேசினார்கள். மேசையின் மீதிருந்த பேப்பர் வெயிடை தூக்கி என் மீது அடித்தார்கள். நான் ஒதுங்கி கொண்டபோது என் பின்னால் இருந்த ஒரு தம்பி மீது அது பட்டது. பின், கண் கண்ணாடி டப்பாவை தூக்கி அடித்தார்கள். அந்த வீடியோவை எல்லாம் அவர்கள் வெளியிடவில்லை. ஆரம்பத்தில், அவர்கள் தவறாக பேசும்போதும் நாங்கள் வீடியோ எதையும் எடுக்கவில்லை. இறுதியாகத்தான் சிறு வீடியோ எடுத்தோம். அதிலும் அவர்கள் ஒருமையில் பேசியிருப்பார்கள். இந்த சம்பவம் குறித்து தாட்கோ பொது மேலாளருக்கு அன்றே வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவித்தேன். அதன் பிறகு, நான் இதை எதையுமே வெளியிடவில்லை.

இந்நிலையில், விழுப்புரம் - கடலூர் மாவட்ட தாட்கோ ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தினர் சிலர், தாட்கோ பொது மேலாளரிடம் இந்த பெண் அதிகாரி குறித்து 18-ம் தேதி அன்று புகார் அளித்துள்ளனர். அன்று மாலையே... நான் அந்தப் பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ மட்டும் வெளியிடப்படுகிறது. அது ஏனெனில், இந்த அதிகாரியின் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்ததும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

அந்த ஒரு பகுதி மட்டுமே, முழு வீடியோ கிடையாது. அந்த அலுவலகத்தில் சி.சி.டி.வி கேமரா இருக்கிறது. அதிலிருக்கும் காட்சிகளை எடுக்கச் சொல்லுங்கள். யாரிடமிருந்து முதலில் தவறு வெளிப்படுகிறது என்பது தெரிந்துவிடும். இதில் வேறு ஏதும் கிடையாது" என்றார்.



from Latest News https://ift.tt/sq3J8b6

Post a Comment

0 Comments