திருப்பூர் மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ‘பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம்’ செயல்பட்டு வந்தது. மக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு, 40% வட்டியுடன் திருப்பித் தருவதாகக் கூறி வசூல்வேட்டையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல்,
கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மலேசியா என்று உலகம் முழுவதும் இருந்து அந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால், அவர்கள் சொன்னபடி பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதுகுறித்து போலீஸில் புகார் அளித்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரித்து வருகிறது. அதில்தான் அந்த நிறுவனம் 58,571 பேரிடம் சுமார் ரூ.930 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனடிப்படையில் பாசி நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது.
இந்த வழக்கின் விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அனைத்துத் தரப்பு வாதங்கள், விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகிய இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.171.74 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் இயக்குநர்களில் ஒருவரான கதிரவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அபராதத் தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இறுதி அறிக்கையில் 1,402 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 58,000க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள நீதிமன்றம், “இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற முதலீட்டாளர்களை விசாரித்து வாக்குமூலம் பெற சி.பி.ஐ முயற்சி எடுக்கவில்லை.
இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்றவாளிகளை விசாரிக்கவும் சி.பி.ஐ தயங்கக் கூடாது.” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/QkE4Ziv
0 Comments