``என்னைப் பார்த்து குடிகாரப் பயலேன்னு சொன்னாங்க... கொன்னுட்டேன்" - அதிர வைத்த இரட்டைக் கொலையாளி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ளது பூதலாபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சையா. இவரின் மனைவி ராஜாமணி. சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் பிச்சையா உயிரிழந்துவிட்டார். இவர்களின் மூத்தமகன் பாண்டி திருமணமாகி வெளியூரில் உள்ளார். இரண்டாவது மகன் சேதுவுடன் வசித்து வந்தார் ராஜாமணி. ராஜாமணி அதே ஊரில் சிறிய பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 27-ம் தேதி இரவில் கடையைப் பூட்டிவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். 28-ம் தேதி அதிகாலையில் ரத்தக் காயங்களோடு அலறி அடித்துக் கொண்டு தனது பெட்டிக்கடை நோக்கி ஓடி வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பொன்னுச்சாமி, ராஜாமணி அம்மாள்

அந்தக்கடை அருகில் இரவில் கடைசியாக வரும் பேருந்தினை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்த டிரைவரும்,கண்டக்டரும் விழித்தனர். “காப்பாத்துங்க தம்பி..” எனச் சொல்லி பஸ்ஸுக்குள் ஏற முயன்றார் ராஜாமணி. அவரை கீழே இழுத்து அரிவாளால் வெட்டிவிட்டு கொலையாளி தப்பியோடினார். ராஜாமணி ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். கொலைச் சம்பவம் குறித்து டிரைவரும், கண்டக்டரும் காடல்குடி போலீஸாருக்கு தகவல் கூறினர்.

போலீஸார் வந்து பார்த்தபோது ராஜாமணியின் வீட்டினை ஆய்வு செய்தனர். அப்போது, ராஜாமணியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டின் வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அந்த வீட்டில் வசித்து வந்த பொன்னுச்சாமி கட்டிலில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். பொன்னுச்சாமியின் மனைவியும், மகளும் விருதுநகரில் வசித்து வருகின்றனர். சற்று பார்வைக்குறைபாடும், செவித்திறன் குறைபாடும் உடைய பொன்னுச்சாமி , முடிதிருத்தும் வேலை செய்து சாப்பிட்டு வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இரட்டைக் கொலையாளி சுப்பையா

ஒரே நாள் நள்ளிரவில் அடுத்தடுத்த வீட்டில் இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பினையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் போலீஸாரையே அதிரச் செய்துள்ளது. “ராஜாமணி அம்மாள் நடத்தி வந்த பெட்டிக்கடையிலதான் பீடி, சிகிரெட் வாங்குவேன். ’தண்ணி அடிச்சிட்டு கடைக்கு வராத குடிகாரப் பயலே’ன்னு சத்தம் போடுவார். நான் அதை பெருசா எடுத்துக்கல. ரெண்டு நாளுக்கு முன்னால போதை கொஞ்சம் அதிகமாயிடுச்சு. தள்ளாடிக்கிட்டே கடைக்குப் போனேன்.

‘எத்தனை தடவை சொல்றது. குடிச்சுட்டு இப்படி கடையில வந்து ரொம்ப பேசிக்கிட்டிருக்க’ன்னு கோவத்துல ரொம்ப சத்தம் போட்டார். அந்த நேரத்துல கடைக்கு வந்திருந்த பொன்னுச்சாமியும் ‘குடிகாரப் பய என்ன சொன்னாலும் திருந்த மாட்டன்மா’ன்னு நக்கலாப் பேசுனாரு. எங்க மூணு பேருக்கும் வாக்குவாதம் வந்துச்சு. ஊருல உள்ள சில பெரிய ஆளுங்களும் கடைக்கு வந்து என்னை சத்தம் போட்டு விரட்டி விட்டாங்க. எல்லாரு முன்னாலயும் என்னை அவதூறாப் பேசி திட்டுனதுனால ரெண்டு பேரையும் கொலை செஞ்சிடணும்னு முடிவு செஞ்சேன். ராத்திரி 12 மணிக்கு மேல பொன்னுச்சாமி வீட்டுக்குப் போனேன். கட்டில்ல தூங்கிக்கிட்டிருந்தார்.

ராஜாமணி கொலை செய்யப்பட்ட இடம்

போர்வையால அவர் வாயை மூடி அரிவாளால வெட்டுனேன். அதுக்குப்பிறகு பக்கத்துல உள்ள ராஜாமணி வீட்டுக்குள்ளப் போனேன். நான் நுழையுற சத்தம் கேட்டு லைட்டு போட்டார். என்னைப் பார்த்து கத்திக்கிட்டே வெளிய ஓடி பஸ்ஸுக்குள்ள ஏறப் போனார். அவரைக் கீழே தள்ளி வெட்டினேன்” எனச் சொல்லியுள்ளார். கொலையாளி பிடிப்பட்டது எப்படி என போலீஸாரிடம் பேசினோம், ”ராஜாமணியும், பொன்னுச்சாமியும் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டப்பட்டுதான் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை முதலில் உறுதி செய்தோம்.

இருவர் கொலை செய்யப்பட்ட விதமும் அரிவாள் வெட்டுகளும் ஒத்துப் போனதால் ஒருவரே இரண்டு கொலைகளையும் செய்திருக்க முடியும் என நினைத்தோம். இருவரின் வீடுகளிலும் எந்தப் பொருளும் திருடு போகவில்லை. அதுவும் கஞ்சா, மது போதைக்கு அடிமையானவரே இப்படிக் கொடூரமாகக் கொலை செய்திருக்க முடியும். ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்ட பிறகு பஸ்ஸை விட்டு வெளியே இறங்கிப் பார்த்த டிரைவரும், கண்டக்டரும் வெள்ளைச்சட்டை, வெள்ளை வேஷ்டியுடன் தலையில் தலைப்பாகை கட்டி காலை சாய்த்தபடியே ஓட்டமும் நடையுமாகச் சென்றவரைப் பார்த்துள்ளனர்.

காடல்குடி காவல் நிலையம்

அந்த ஊரில் காலைச் சாய்த்து நடப்பது யார் என விசாரித்தோம். சுப்பையாவைப் பற்றிச் சொன்னார்கள். எந்நேரமும் மதுபோதையில் இருக்கும் சுப்பையாவை விட்டு மனைவி, மகள் பிரிந்து வாழ்வதாகச் சொன்னார்கள். அதிலும், மதுபோதையில் ராஜாமணியின் கடைக்குச் சென்று அடிக்கடி வாய்த்தகராறு செய்து வந்ததையும் ஊர்மக்கள் சொன்னார்கள். அந்த ஊரில் உள்ள சிலரின் வீடுகளில் உள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தோம். அதிகாலை நேரத்தில் காலைச் சாய்த்தபடி பின்னங்கையைக் கட்டிக்கொண்டு சுப்பையா வேகமாக நடந்து செல்வதை உறுதி செய்தோம். இதனையடுத்தே அவரை தேடி கைது செய்தோம். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/wXv2Usg

Post a Comment

0 Comments