Doctor Vikatan: கண்களுக்கடியில் கருவளையங்கள்... நிரந்தரமாக குணப்படுத்த வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 34. கண்களுக்கடியில் கருவளையங்கள் காணப்படுகின்றன. நன்றாகத் தூங்குகிறேன். ஆனாலும் கருவளையங்கள் போகவில்லை. கருவளையங்களைப் போக்கும் க்ரீம் உபயோகிக்கலாமா? இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? இதை நிரந்தரமாக குணப்படுத்த சிகிச்சைகளே கிடையாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

30 வயதின் தொடக்கம் என்பது பலருக்கும் முதுமையின் தொடக்கமாகவும் இருக்கும். அதாவது சருமத்தின் முதிர்ச்சி மற்றும் முதுமையின் தொடக்கம் ஆரம்பமாகும்.

அதனால், 20 வயதின் இறுதியிலேயே முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப்போடுவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட வேண்டும். சருமம் தொய்வடையாமலும் சுருக்கங்கள் இன்றியும் இருப்பதற்கான விஷயங்களை அப்போதிலிருந்தே செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவோம்.

கண்களுக்கடியில் வரும் கருவளையங்களும் அப்படித்தான். முதலில் இதற்கான காரணங்களைப் பார்ப்போம். ஊட்டச்சத்துக் குறைபாடும், தூக்கமின்மையும் இதற்கான பிரதான காரணங்கள். அடுத்தபடியாக முறைதவறிய வாழ்க்கை முறை.

இதையடுத்து சிலருக்கு இயல்பிலேயே கண்கள் உள்ளடங்கிக் காணப்படும். அதனால் அவர்களுக்கு எப்போதும் கண்களுக்கடியில் நிழல் போல ஒரு கருமை தெரிந்துகொண்டே இருக்கும். இது திடீரென வரும் பிரச்னையல்ல, அவர்களுக்கு எப்போதும் இருக்கும் பிரச்னை.

கண்களுக்கடியில் உள்ள ரத்தக் குழாய்கள் சரியாக இயங்காதபட்சத்தில் அவற்றிலுள்ள நிறமிகள் கசிந்து, கருவளையங்களுக்கு காரணமாகலாம். இது ஸ்ட்ரெஸ், கண்களை அதிகம் தேய்ப்பது, ஊட்டச்சத்துக் குறைபாடு என பல விஷயங்களால் நிகழலாம்.

கண்

கண்களைச் சுற்றி இயல்பிலேயே கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும். வயதாக, ஆக இது இன்னும் குறையும். வயதாக ஆக கண்களுக்கடியில் உள்ள சருமம் வறண்டு, கருவளையங்களை ஏற்படுத்தலாம்.

கருவளையங்களைத் தவிர்க்க, சரும வறட்சி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சரும மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கண்களுக்கடியில் க்ரீம் உபயோகிக்கலாம். சன் ஸ்கிரீன் உபயோகிப்பதும் மிக முக்கியம்.

இவற்றுக்கு முன் உங்களுக்கு ஏதேனும் சத்துக்குறைபாடு உள்ளதா என்று பரிசோதியுங்கள். பி12, பி3 அல்லது ஃபெரிட்டின் உள்ளிட்ட சத்துக்குறைபாடுகள் இருக்கின்றனவா, ரத்தத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

சரியான தூக்கம் மிகமிக முக்கியம். உடலியல் கடிகாரம் பாதிக்காதபடி சரியான நேரத்துக்குத் தூங்கி, சரியான நேரத்துக்கு விழிக்க வேண்டும். ஃபில்லர்ஸ் எனும் ஊசிகள் மூலம் உடனடியாக இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும்.

கண்கள்

கருவளையங்களைப் போக்க ஏராளமான தீர்வுகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பின்பற்றுவதற்கு முன் உங்களுக்கு இந்தப் பிரச்னை வந்ததற்கான காரணம் அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைப் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/Hjy127m

Post a Comment

0 Comments