நெல்லை: பகலில் ரயில் பயணம்; இரவில் கொள்ளை; சென்னையில் உல்லாசம்... `தனி ஒருவன்’ கொள்ளையன் கைது!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. கைரேகை கூட விட்டுச் செல்லாத அளவுக்கு மிகக் கவனமுடன் கொள்ளை நடந்ததால் அதில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர்.

கொள்ளையரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட பண்ணைசங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரின் வீட்டில் கடந்த ஜூலை 4-ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இரவு நேரத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அக்டோபர் 30-ம் தேதி சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் ருபினா பர்வீன் என்பவரின் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

போலீஸாருக்கு சவால் விடும் வகையில் நடக்கும் இத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய தென் மண்டல ஐ.ஜி-யான ஆஸ்ரா கர்க் தீவிரம் காட்டினார். அதனால் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணன், ஏ.டி.எஸ்.பி-யான பல்வீர் சிங் ஆகியோர் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீஸார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளைக் கொண்டு விசாரித்தனர். அப்போது கொள்ளை நடந்த பகுதிகளில், இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் சாலையில் சென்றது தெரியவந்தது. அந்த நபர் யார் என்பது தெரியாததால், அருகில் உள்ள மாவட்ட காவல்நிலையங்களுக்கும் அவரின் புகைப்படத்தை அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சந்தேகத்துக்கு இடமான நபரின் பெயர் சுடலைபழம் என்பதும் 44 வயதான அவர் குமரி மாவட்டம், முகிலன் குடியிருப்பு, கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரைத் தேடிச் சென்றபோது வீட்டில் அவர் இல்லை. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் ஊருக்கே வரவில்லை என்பதும் தெரியவந்தது.

கொள்ளையடித்த நகைகளுடன் கைதான சுடலைபழம்

நெல்லை மாவட்டத்தில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரைப் பிடிக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் அவரின் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்துகொண்ட போலீஸார் நேற்று (22-ம் தேதி) அவரை கைது செய்தனர்.

கைதான சுடலைப்பழம் வைத்திருந்த பையில் 1.48 கிலோ தங்க நகைகளும் அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 50,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன், கொள்ளையடிக்கும்போது கைரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளைப் பயன்படுத்தியுள்ளார். கொள்ளைக்குப் பயன்படுத்திய இரும்புக் கம்பிகளும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, சேலம், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கையுறை, கம்பி மற்றும் ஆயுதங்கள்

பகலில் ரயிலில் ஏறும் அவர், இரவு வந்ததும் அந்த ஊரில் இறங்கி, அங்கு பூட்டிக் கிடக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கொள்ளை சம்பவங்களுக்கு யாரையும் கூட்டாளியாகச் சேர்க்காமல் தனி நபராகச் சென்றுள்ளார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சென்னை சென்று துணை நடிகைகள் உள்ளிட்டோருடன் உல்லாசமாக இருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சுடலைபழம் மீது தமிழகம் முழுவதும் 50-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரை அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.



from Latest News https://ift.tt/wLFfQCU

Post a Comment

0 Comments