மதுரை: திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை விழா கொடியேற்றம்!

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இந்நிகழ்வில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

கொடியேற்றம்

முருகக்கடவுளின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் கார்த்திகை திருவிழாவும் ஒன்று.

பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவுக்கான கொடியேற்ற விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு ஆதாரதனைகள் நடைபெற்றன.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி

இதையடுத்து சுவாமி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் புனிதநீர் கொண்டு அபிஷேகம் செய்து, தர்ப்பை புல், மாவிலை, சந்தனம் குங்குமம், மலர் மாலைகள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றுக் கொடி ஏற்றப்பட்டது.

திருவிழாவினை ஒட்டி, சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் தினமும் காலையிலும், மாலையிலும் பல்வேறு அலங்காரங்களில் தங்க சப்பரம், தங்க மயில் வாகனம், தங்கக்குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

கொடியேற்றறும் விழா

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற டிசம்பர் 5-ம் தேதி மாலை 7 மணி அளவில் சுவாமிக்கு வைரக்கிரீடம் அணிவித்து நவரத்தின கற்கள் பொருந்திய செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 6-ம் தேதி மாலையில் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு மலைமீது உச்சி பிள்ளையார் கோயிலில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். இதற்கான விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/kw1mY68

Post a Comment

0 Comments