``அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" - பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம்!

திமுக-விலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்த திருச்சி சூர்யா சிவா, தமிழக பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ``சொந்தக் கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்... இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநிலப் பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு.

அண்ணாமலை | காயத்ரி ரகுராம் | சூர்யா சிவா

திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மைச் சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீஸார் கைதுசெய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை, என் ஆறுதல் மற்றும் ஆதரவு" எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், திருச்சி சூர்யா சிவாவின் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைத்தும், காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதால், கட்சியில் அவர் வகித்துவரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார் எனவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவரை சுற்றி பல்வேறு சலசலப்புகள் தொடர்ந்தன. இந்த நிலையில், திருச்சி சூர்யா சிவா, பா.ஜ.க-விலிருந்து வெளியேறினார்.

காயத்ரி ரகுராம்

சமீபத்தில் காயத்ரி ரகுராம் நமது ஜுனியர் விகனுக்கு அளித்த பேட்டியில்,``பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக, ஆறுமாதகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டது என்ன நியாயம்..? எல்லா இடங்களிலும் வளர்ந்தால் கீழே தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள். தேர்தல் வரப்போகிறது. சிலர் சீட் கேட்கப் போகிறார்கள். அவர்களுக்குப் போட்டியாக இருக்கும்போது நிச்சயம் தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள். அதனாலேயே கட்சிக்கு எதிராக நான் செயல்படுவது போல், ‘குருமூர்த்தி கும்பல்... தி.மு.க ஸ்லீப்பர் செல்...’ என்று தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இதையெல்லாம் தாண்டி மீண்டும் வருவேன்." எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், ``மிகுந்த மனவேதனையுடன் தமிழக பா.ஜ.க-விலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருக்கிறேன். ஏனெனில், எனது புகார் தொடர்பாக ஒரு விசாரணை நடத்தக் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. சம உரிமை கிடையாது. பெண்களுக்கு மரியாதையும் இல்லை. அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை. உண்மையான தொண்டர்கள் அண்ணாமலையால் விரட்டியடிக்கப்படுவது தான் நடந்து கொண்டிருக்கிறது.

பா.ஜ.க-விற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் இந்த அவசர முடிவு எடுப்பதற்கு அண்ணாமலை தான் காரணம். இனி அவரைப் பற்றி பேசப் போவதில்லை. ஏனெனில் அவர் தரம் தாழ்ந்த தந்திரக்காரர். கடந்த எட்டு ஆண்டுகளாக என்னுடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் எனது நன்றி. தமிழக பா.ஜ.க-வில் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். மரியாதை இல்லாத இடத்தில் இருக்க வேண்டாம்.

போலீசாரிடம் புகார் பதிவு செய்ய தயாராக இருக்கிறேன். அண்ணாமலை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் ஒரு மோசமான பேர்வழி. எனக்கு எதிராக செயல்பட்டுவரும் வார் ரூம் பற்றியும் புகார் அளிப்பேன். நீதி தாமதிக்கப்படுவது என்பது அது மறுக்கப்படுவதற்கு சமம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.



from Latest News https://ift.tt/x4SFL30

Post a Comment

0 Comments