`நாட்டில் சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டது!' - ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை, அண்ணா சாலையில் இருக்கும் தாஜ் கன்னிமாரா ஹோட்டலில், 'கில்ட் ஆஃப் சர்வீஸ்' என்ற தொண்டு நிறுவனத்தின் நூற்றாண்டு விழா நேற்றைய தினம் நடந்தது. இந்த நிறுவனமானது கல்வியில் பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் ஊனமுற்றோர் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சமூக சேவைகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், "கில்ட் ஆஃப் சர்வீஸ் தொண்டு நிறுவனம் கல்வி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் முன்னேற்றம், மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம் என பல தரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தச் சேவையை வழங்கும் என நான் நம்புகிறேன். சமூகத்தில் புறக்கணிக்கப்படும் நபர்களுக்கு சேவை நிறுவனங்கள், சேவையை வழங்க வேண்டும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

குறிப்பாக சமூகத்தில் புறக்கணிக்கணிப்படும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள்மீது சேவை நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களுடைய முன்னேற்றத்தில் பங்கு வகிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் பேரும், தமிழகத்தில் 40,000 பேரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவர்கள்கூட தொட்டு சிகிச்சையளிக்க மறுப்பதை நான் பார்த்திருக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட மனிதர்களாகிய தொழுநோயாளர்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு நாம் உதவ வேண்டும்.

அவர்களை நோக்கி நாம் நமது சேவைகளை செலுத்த வேண்டும். சேவை என்பது ஆயிரம் ஆண்டு பழைமையான நமது கலாசாரத்தில் ஊறிப்போன ஒன்று. நாம் நமக்காக மட்டுமல்ல பிறருக்காகவும் வாழ வேண்டும் என்பதை நம் மூதாதையர்கள் கற்றுத் தந்திருக்கின்றனர். அந்த பண்பு நம் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. இந்த நாகரிக சமூகக் குடும்பத்தைத்தான் நாம் பாரத் என்று அழைக்கிறோம்.

அமெரிக்கா

2047-ல் நம்முடைய 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் உலகத்துக்கே நற்குணங்களில் தலைசிறந்து விளங்கும் நாடாக நாம் திகழ வேண்டும். இந்தியா உலகிலேயே தலைசிறந்து விளங்கும்போது, உலகமே அதை மிகவும் சவுகரியமாக உணரும். நாம்தான் அதற்கு சான்று. ஐரோப்பிய நாடுகள் உலகிலேயே வலிமையாக இருந்தபோதும், அது காலனியாதிக்கத்துக்குத்தான் வழிவகுத்தது.

மிகப் பெரிய அளவில் சுரண்டல்கள் நடந்தன. நாமே நமக்கு சான்று. அமெரிக்காவும், சோவித் ரஷ்யாவும் வலிமையானபோது, இரு நாடுகளும் தங்கள் கொள்கைகளால் வேறுபட்டு, எண்ணற்ற மக்களுக்கு வெறும் துயரத்தை மட்டுமே கொடுக்கின்றன. இதில் ஒன்று ஜனநாயகத்தின் பெயராலும், இன்னொன்று பொதுவுடைமை சிந்தாந்தத்தின் பெயராலும் நடக்கிறது.

சீனா

சீனா சமீபகாலமாக வலிமையடைவது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கி வருகிறது என்பதை நாம் கண்கூடாக நம் அருகிலிருக்கும் இலங்கை மூலமே பார்த்து வருகிறோம். நான் பாகிஸ்தான் பற்றி பேசவில்லை. ஆனால், இந்தியா உலக அரங்கில் வலிமை அடையும்போது இவ்வாறெல்லாம் நடக்காது. இந்த கொரோனாவின்போது என்ன நடந்தது என்று எண்ணிப் பாருங்கள். உலகமே செய்வதறியாது திகைத்தபோது, நம் நாடு தடுப்பூசிகளை உருவாக்கியது.

பல நாடுகள் தாங்கள் உருவாக்கிய தடுப்பூசிகளின் விலையை ஏற்றிக் கொண்டிருந்தபோது, நாம் சுமார் 150 நாடுகளுடன் தடுப்பூசிகளை பகிர்ந்து கொண்டிருந்தோம். நம்முடைய தேவைகளையே பூர்த்தி செய்ய முடியாமல் திணறியபோதும், நாம் அதை செய்தோம். இதுதான் இந்தியா. உலகில் 3-ல் 2 பங்கு நாடுகள் குரலற்றவையாக இருக்கின்றன. அவை இந்தியா தங்கள் குரலாக எதிரொலிக்கும் என்று நம்புகின்றன.

ரஷ்யா

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் அனைத்து நாடுகளையும் உற்றுநோக்க வைக்கிறது. இந்தியாதான் உலகின் நம்பிக்கை. நாம் இந்த நாட்டைப் பிளவுபடுத்தி, துண்டுகளாக, இடங்களாகப் பார்க்கவில்லை. ஒரு குடும்பமாகப் பார்க்கிறோம். காலனியாதிக்கவாதிகள்தான் நம் நாட்டை பிரித்தார்கள். 1951-ல் இருந்ததைவிட இப்போது சாதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமடங்காகிவிட்டது. பழங்குடிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

புது, புது அடையாளங்களுடன் வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. சமூகம் பிரிக்கப்படுகிறது. நாம் அடுத்தவர்களின் கண்களாகச் செயல்படும் போதுதான் இத்தகைய பிரிவுகள் உருவாகின்றன. ஆனால் நாம் நம்முடைய கண்களால் பார்த்தோமானால் ஒரு குடும்பமாகத்தான் இருக்கிறோம். இருக்க வேண்டும். இங்கே ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை. இங்கே இருக்கும் பிரச்னைகளை ஒரு குடும்பத்தின் பிரச்னையாகத்தான் கருதி தீர்க்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது" என்றார்.



from Latest News https://ift.tt/aJVnGby

Post a Comment

0 Comments