Doctor Vikatan: வயதான காலத்தில் மூளை தொடர்பான பாதிப்புகள் வராமல் தடுப்பது சாத்தியமா?

Doctor Vikatan: வயதான காலத்தில் மூளையின் ஆரோக்கியத்தைச் சிறப்பாக வைத்துக் கொள்வது சாத்தியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா சாரி

நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ப்ரித்திகா | சென்னை

வயதாக, ஆக எல்லோருக்குமே மூளையின் ஆற்றல் குறையத் தொடங்கும். வயதானவர்களுக்கு அல்சைமர் பாதிப்பும் வரக்கூடும். அந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள், உயிரோடு இருப்பார்களே தவிர, சுற்றி உள்ள யாரையும் அடையாளம் தெரியாது... எதுவும் நினைவில் இருக்காது. அந்த அளவுக்கு மிக மோசமான நோய் அது. அந்தப் பிரச்னைக்கு சிகிச்சையே கிடையாது.

ஆனால் 20, 30 வயதிலிருந்தே மூளையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் பிற்காலத்தில் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். சரிவிகித உணவுப் பழக்கம், போதுமான அளவு தூக்கம், உடற்பயிற்சி என எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தான் மூளையின் ஆரோக்கியத்துக்கும் வலியுறுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் கேள்வி.

மூளை என்பது 50 சதவிகிதம் கொழுப்புச் சத்தால் ஆனது. ஆனால் இன்று பெரும்பாலானோர் கொலஸ்ட்ரால், இதய ஆரோக்கியம் என்ற பெயரில் கொழுப்பு குறைவாக அல்லது அறவே கொழுப்பு இல்லாமல்தான் சாப்பிடுகிறார்கள். அப்படி கொழுப்பு குறைவாகச் சாப்பிடுவது மூளைக்கு நல்லதல்ல. எனவே கொழுப்பே இல்லாமல் சாப்பிடுவதைத் தவிர்த்து ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.

மீன், பாதாம், அவகேடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. மூளையில் 75 சதவிகித அளவு நீர்ச்சத்து இருக்கும். அதைத் தக்கவைக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

மனித மூளை

உடற்பயிற்சி செய்யும்போது ஆக்ஸிஜன் அதிகமுள்ள ரத்தமானது மூளைக்குச் செல்லும். அது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. உடற்பயிற்சியின் போது Brain-derived neurotrophic factor (BDNF) என்கிற சாரம் வெளியேற்றப்படும். அது புதிய நரம்பு செல்கள் உருவாகக் காரணமாகும். பழுதடைந்த செல்களை ரிப்பேர் செய்யவும் உதவுவதால், மூளையின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

அடுத்தது தூக்கம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால் மூளையின் செல்கள் பெரிதும் பாதிக்கப்படும். ஐடி வேலை, பிபிஓ வேலைகளில் இருப்பவர்கள், தூக்க நேரத்தைக் குறைப்பதன் மூலம், மூளையின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதன் விளைவு இள வயதில் தெரியாவிட்டாலும், 60 வயதுக்கு மேல் நிச்சயம் தெரியும். இதையெல்லாம் தடுக்க வேண்டும் என்றால் இன்றே விழித்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest news https://ift.tt/wi3zDm4

Post a Comment

0 Comments