தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டம்... மல்யுத்த வீரர்கள் முன்வைத்த 5 முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் குரல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகிறது. இப்படியான சூழலில் பஜ்ரங் புனியாவும், சாக்ஷி மாலிக்கும் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவர, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

பிரிஜ் பூஷண் சரண் சிங் - மல்யுத்த வீராங்கனை

இந்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், `மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது' என நேற்றிரவு ட்வீட் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் பேரில் பஜ்ரங் புனியாவும், சாக்ஷி மாலிக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை இன்று நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் அனுராக் தாக்கூரிடம் ஐந்து முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐந்து முக்கிய நிபந்தனைகள்:

1. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராகப் பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.

2. பிரிஜ் பூஷண் சரண் சிங் உட்பட அவரின் குடும்பத்தினர் யாரும் மல்யுத்த சம்மேளனத்தில் அங்கம் வகிக்கக் கூடாது.

3. இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு நேர்மையான, வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் - அனுராக் தாக்கூர்

4. கடந்த 28-ம் தேதி நடந்த போராட்டத்தின்போது மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள்மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை ரத்துசெய்ய வேண்டும்.

5. முக்கியமாக பிரிஜ் பூஷண் கைதுசெய்யப்பட வேண்டும்.

இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பஜ்ரங் புனியா, ``அனுராக் தாக்கூரின் கோரிக்கையின் பேரில் ஜூன் 15 வரை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest news https://ift.tt/sYCAfq7

Post a Comment

0 Comments