``ஓ.பி.எஸ் எனும் மண் குதிரைதான், இ.பி.எஸ்-ஸை முதல்வராக்கி அழகுபார்த்தது!" - சொல்கிறார் வைத்திலிங்கம்

தஞ்சாவூர் ரயிலடியில், கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென தி.மு.க அரசை வலியுறுத்தி, அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. (ஓ.பி.எஸ். அணி), அ.ம.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் ஓ.பி.எஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் பேசுகையில், ``ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவை நாங்கள் குடியிருந்த கோயிலாக நினைக்கிறோம்

வைத்திலிங்கம்

இந்திய அளவில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறையிடம் அனுமதி பெற்று 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கக்கூடிய கொடநாடு பங்களாவில் மின்சாரம் ஏன் நிறுத்தப்பட்டது... இரவு ஒன்பது மணிக்கு மேல் வனத்துறையிடம்தான் கொடநாடு பங்களாவின் சாவி இருக்கும். அம்மா செல்ல வேண்டும் என்றாலும், வனத்துறையிடம் சாவி வாங்கித்தான் செல்ல வேண்டும். அப்படி இருக்கும்போது எப்படிக் கொள்ளையர்கள் உள்ளே சென்றார்கள்.

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சிசிடிவி கேமரா எப்படி துண்டிக்கப்பட்டது... இப்படிப் பல மர்மங்கள் அதில் இருக்கின்றன. `நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 நாள்களில் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவோம்' என அப்போது சொன்னார் இன்றைய முதலமைச்சர். ஆனால், 900 நாள்கள் ஆகிவிட்டன, என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்... எங்களைப் பார்த்து `பி டீம்' என்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த வழக்கை விசாரிக்காமல் இருப்பதற்காக எடப்பாடியும், ஸ்டாலினும் கூட்டாக இருக்கிறார்களோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். தி.மு.க-வின் `பி டீம்' எடப்பாடி பழனிசாமிதான். கொடநாடு கொலை, கொள்ளை பற்றி எத்தனையோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கண்ணிருந்தும் குருடனாய், வாய் இருந்தும் ஊமையாய் இந்த அரசு ஏன் செயல்படுகிறது என்பதுதான் கேள்வி.

வைத்திலிங்கம்

யார் குற்றவாளியாக இருந்தாலும் எங்களுக்கும், மக்களுக்கும் தெரிய வேண்டும். `ஓ.பி.எஸ்-ஸும், டி.டி.வி.தினகரனும் மண் குதிரைகள்' என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். ஓ.பி.எஸ் என்ற மண் குதிரைதான், நடக்க முடியாத எடப்பாடியை நான்கரை ஆண்டுகள் முதலமைச்சராக்கி அழகுபார்த்தது. அதேபோல் அண்ணன் தினகரன்தான் எதற்கும் லாயக்கற்ற அவரை முதலமைச்சராக்கினார். மண் குதிரை என்று சொல்பவர்கள்தான் எடப்பாடி முதலமைச்சராவதற்கு காரணமானவர்கள்.

இரட்டை இலைச்சின்னம் மட்டும் எடப்பாடியிடம் இல்லை என்றால், அனைத்துத் தொகுதிகளிலும் இரண்டாயிரம் வாக்குகள்கூட வாங்க முடியாது. `ஃபிங்கர் டிப்ஸில் பேசுவார்' என்று பொன்னையன் சொல்கிறார். ஆனால், கம்பராமயணத்தை எழுதியவர் யார் என்றால் சேக்கிழார் என்பார். இப்படி ஒரு முட்டாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக, பிரதமராக வருவார் என்கிறார்கள். கோமாளிகளின் கூடாரமாக இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் கட்சி. பணம் ஒன்றுதான் அவர்களுடைய எண்ணம், இரட்டை இலைச்சின்னம் இல்லையென்றால் சந்திக்குச் சந்தி நிற்பார்கள்.

ஓ.பி.எஸ் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டம்

நாங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துவிட்டோம். இந்த சக்திகளை விட்டு தமிழ்நாட்டை யாரும் ஆள முடியாது. எங்களுக்குத் தேவை நீதி, நியாயம். ஸ்டாலின் அவர்களே, கோவலன் இறந்ததற்கு கண்ணகி, நெடுஞ்செழிய பாண்டியனிடம் போய் நீதி கேட்டார். அம்மா வீட்டில் நடந்த கொலைக்கு நாங்கள் நீதி கேட்கிறோம். அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். ஆனால், இப்போது தெய்வம் நின்று கொல்கிறது, அரசன் காலம் தாழ்த்துகிறான். அதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள். எங்களுக்கு நியாயத்தை சீக்கிரம் வழங்க வேண்டும்" என்றார்.



from Latest news https://ift.tt/Y2BhPjr

Post a Comment

0 Comments