தந்தையின் தற்கொலை; கணவன் குடும்பத்தைப் பழிவாங்க 5 பேருக்குக் கொடிய விஷம்! - சிக்கிய பெண் விஞ்ஞானி

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மகாகேவ் என்ற கிராமத்தைச் சேர்ந்த சங்கர், அவருடைய மனைவி விஜயா, இரண்டு மகள்கள், மகன் ஆகியோர் கடந்த மாதம் 20-ம் தேதியிலிருந்து அக்டோபர் 10-ம் தேதி வரை மர்மமான முறையில் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். அவர்களது உடலில் திடீரென பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு கொடூரமான முறையில் ஒவ்வொருவராக இறந்தனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கிராமத்தில் ஒருவித பயமும் ஏற்பட ஆரம்பித்தது. சங்கர் குடும்பத்தைப் பேய் பிடித்திருப்பதாக கிராம மக்கள் நம்பினர். சங்கர் குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் இதே போன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கைதானவர்கள்

மர்மமான இறப்புகள் குறித்து தகவல் கிடைத்ததும், போலீஸார் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் அவர்களது ரத்தத்தில் கொடூரமான விஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்த ஆரம்பித்தனர். விசாரணையில் சங்கரின் மருமகள் சங்கமித்ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்தான் உறவுக்காரப் பெண் ரோஜா என்பவருடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது. தெலங்கானாவிலிருந்து கொடிய விஷமாக கருதப்படும் தாலியத்தை ஆன்லைன் மூலம் வாங்கி, அதைத் தன் கணவர், அவருடைய பெற்றோர், கணவரின் இரண்டு சகோதரிகள் ஆகியோருக்கு சாப்பாடு, தண்ணீரில் கலந்துகொடுத்துக் கொலைசெய்ததை சங்கமித்ரா விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

இது குறித்து கட்சிரோலி மாவட்ட கண்காணிப்பாளர் நிலோத்பால் கூறுகையில், ''சங்கமித்ராவின் போனை சோதனை செய்து பார்த்ததில் ததுரா என்ற மூலிகை விஷத்தையும் தேடியிருந்தார். அதை வாங்கித் தண்ணீரில் கலந்தபோது தண்ணீரின் கலர் மாறியிருந்தது. இதனால் அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டு கொடிய விஷத்தை வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறார். அவரிடம் விசாரித்தபோது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவரின் தந்தை தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். கணவன் வீட்டார் சங்கமித்ராவைக் கொடுமை செய்துவந்ததைக் கேட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

விஷம் குடித்து தற்கொலை முயற்சி

அதற்குப் பழிவாங்கும் நோக்கத்தில் இது போன்று செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்'' என்றார்.

22 வயதாகும் சங்கமித்ரா வேளாண் விஞ்ஞானி. இதே முறையில் கடந்த ஆண்டு மும்பையிலும் ஒரு பெண், தன் கணவர், அவரின் குடும்பத்துக்குச் சாப்பாட்டில் தாலியத்தைப் படிப்படியாகக் கலந்துகொடுத்து கொலைசெய்தார். கைதுசெய்யப்பட்டிருக்கும் மற்றொரு பெண்ணான ரோஜாவுக்கு சங்கர் குடும்பத்துடன் சொத்துப் பிரச்னை இருந்துவந்திருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் சங்கமித்ராவுடன் சேர்ந்துகொண்டு கொலைக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். இதில் பயன்படுத்தப்பட்ட விஷம் உலகத்திலேயே மிகவும் கொடியது. அதற்கு எந்தவித கலரும் கிடையாது. வாசனையும் கிடையாது. இதனால் விஷத்தை எதில் கலந்தாலும் வெளியில் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/JVj4Odf

Post a Comment

0 Comments