விலைவாசி உயர்வைத் தாண்டி பணத்தை பெருக்க என்ன செய்ய வேண்டும்?

இப்போது உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதன் இன்றைய மதிப்பு, நேற்றைய மதிப்பு, நாளைய மதிப்பு என்பது வேறு வேறாக இருக்கிறது. உதாரணத்துக்கு இன்றைக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் சென்னை புற நகரில் ரூ.1 லட்சத்துக்கு ஒரு ஏக்கர் (100 சென்ட் – 43,600 சதுர அடி) இடம் வாங்க முடிந்தது. இன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒரு சென்ட் இடம் கூட வாங்க முடியாது. அதிகபட்சம் கால் சென்ட் (ஒரு சென்ட் 436 சதுர அடி) அதாவது சுமார் 110 சதுர அடி இடம் கூட வாங்க முடியாது. ஒரு சதுர அடி விலை ரூ.910 என்கிற மதிப்பீட்டில்தான் இந்தக் கணக்கீடு போடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இதனை விட விலை அதிகமாக இருக்கிறது. இப்படி பணத்தின் மதிப்பை குறைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது பணவீக்க விகிதம் (Inflation) என்கிற விலைவாசி உயர்வாகும்.

பணவீக்கம்

விலைவாசி உயர்வின் பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளில் பணவீக்க விகிதம் ஆண்டுக்கு சராசரியாக 5% ஆக உள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 6 சதவிகிதமாக இருக்கிறது. பணவீக்க விகிதத்தை குறைக்க ஆர்பிஐ கடனுக்கான வட்டி விகிதத்தை அண்மைக் காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால், சுமார் 7 - 7.5 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடனுக்கான வட்டி தற்போது (2023 நவம்பர்) 9 - 9.5% உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுவாக, எந்த ஒரு முதலீடாக இருந்தாலும், அதன் மூலமான வட்டி /வருமானம் பணவீக்க விகிதத்தை விட சுமார் 3 முதல் 4% அதிகமாக இருந்தால்தான் அது லாபகரமான முதலீடு என சொல்லலாம்.

உதாணத்துக்கு, ஒரு பொருளின் விலை இந்த ஆண்டு 100 ரூபாயாக இருக்கிறது. அடுத்த ஆண்டு அது 10% விலை உயர்ந்து 110 ரூபாயாக உயர்கிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் செய்திருக்கும் முதலீட்டுக்கு 7% வருமானம் கிடைத்து, அது 107 ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்றால், அந்த குறிப்பிட்ட பொருளை ஓராண்டு கழித்து உங்கள் முதலீட்டின் மூலம் வாங்க முடியாது. மூன்று ரூபாய் கடன் வாங்கிதான் வாங்க வேண்டும். இப்போது, முதலீடு மூலமான வருமானம் பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் ஏன் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.

பணத்தின் மதிப்பு குறைவு..!

ஒருவர் பீரோ அல்லது வீட்டில் கட்டிலுக்கு அடியில் பணத்தை பாதுகாப்பாக வைத்திருந்தால் அதன் மதிப்பு வெகுவாக குறையும். பணத்தின் மதிப்பு எப்போது பாதியாக குறையும் என்பதை கணக்கிட ஒரு எளிய பார்முலா இருக்கிறது.

அதாவது, பணவீக்க விகிதத்தை 70 - ஐ கொண்டு வகுக்க கிடைக்கும் எண் ஆனது, இன்னும் எத்தனை ஆண்டுகளில் பணத்தின் மதிப்பை குறைக்கும் என்பதை சுட்டிக் காட்டும்.

பணத்தின் மதிப்பு பாதியாக குறைய எடுத்துகொள்ளும் ஆண்டுகள் = 70 / சராசரி பணவீக்க விகிதம்

உதாரணமாக, தற்போதைய பணவீக்க மதிப்பு 6% என வைத்துக்கொள்வோம். பணத்தின் மதிப்பு, (70/6=) 11.66 அதாவது சுமார் 11 ஆண்டுகள் மற்றும் ஐந்து மாதங்களில் பாதியாக குறையும்.

ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 7 சதவிகிதம் என்கிற நிலையில் ஒருவரிடம் ரூ.1 லட்சம் இருந்தால் அவர் எதிலும் முதலீடு செய்யாமல் பணத்தை வீட்டில் பத்திரமாக வைத்திருந்தால் ன்றால் அதன் மதிப்பு (70/10) 10 ஆண்டுகளில் ரூ.50,000 ஆக குறைந்துவிடும்.

பணவீக்க விகிதம்

இதுவே பணவீக்க விகிதம் 10% என அதிகமாக இருந்தால், பணத்தை எதிலும் முதலீடு செய்யாமல் வைத்திருந்தால் 70/10 = 7 ஆண்டுகளில் அதன் மதிப்பு பாதியாக குறைந்துவிடும். ரூ.1 லட்சத்தை பீரோ/ அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தால் பணத்தின் மதிப்பு 7 ஆண்டுகளில் ரூ.50,000 ஆக பாதியாக குறைந்துவிடும். இந்தக் கணக்கீடு நம்முடைய முதலீடுகள் பணவீக்கத்தை தாண்டி வளர்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு உதவும்.

பணத்தை முதலீடு செய்யாமல் சும்மா வைத்திருப்பது என்பது பெரும் இழப்பாகும். காலப் போக்கில் பொருள்களின் விலைகள் மற்றும் சேவை கட்டணங்கள் அதிகரிக்கும்போது, பணத்தின் மதிப்பு, குறைந்து கொண்டே செல்கிறது. வேறு விதமாகச் சொல்வது என்றால், பணத்தின் மூலமாக ‘வாங்கும் சக்தி’ குறைகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு வடை விலை ரூ.3, ரூ.5. என இருந்தது, விலை ரூ.10. ரூ.15 என்பதாக அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு என்பது பெரிய அளவு வடை அல்லது சிறந்த தரமான வடை என்பதால் அல்ல, விலைவாசி உயர்வால் இந்த விலை உயர்வு நடந்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன் ரூ.3/5-க்கு வடை வாங்கிய நிலையில் அந்த தொகைக்கு வடை வாங்க முடியாத நிலை, பணத்தின் மூலம் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது.

பணவீக்க விகிதத்தை தாண்டிய வருமானம்..!

பணத்தின் மதிப்பு குறைவதைத் தவிர்க்க, பணவீக்கத்தை விட அதிக வருமானம் கிடைக்கும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். வங்கி சேமிப்பு கணக்கு என்றால் ஆண்டுக்கு சராசரியாக 3 சதவிகிதம் தான் கிடைக்கும். ஃபிக்ஸட் டெபாசிட் என்றால் 6.5-7%, தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் என்றால் சுமார் 8% வருமானம் கிடைக்கும்.

பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் என்கிற போது பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தரும். இதர முதலீடுகளை விட இந்த ஃபண்ட்களில் அதிக ரிஸ்க் இருக்கிறது என்றாலும் முதலீட்டுப் பரவலாக்கம், நீண்ட கால முதலீடு (ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட நிலை) போன்றவற்றால் ரிஸ்க் குறைந்து, ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

கட்டுரையாளர்: ஆர். வெங்கடேஷ்

எந்த ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும்?

முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பேலன்ஸ்ட் அட்வான்ட்டேஜ் ஃபண்ட், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவற்றீல் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். முதலீட்டில் நடுத்தர அளவு ரிஸ்க் எடுப்பவர்கள் அக்ரசிவ் ஹைபிரீட் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட், ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்ட ஃபண்ட்களில் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் இருக்கும்பட்சத்தில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதற்கு குறைவாக இருந்தால் கடன் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டுக் காலம் 10, 15, 20 ஆண்டுகள் என நீண்டதாக இருந்தால், முதலீட்டில் மிக அதிக ரிஸ்க் எடுக்கலாம் என்றால் மட்டுமே மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும்.



from Latest news https://ift.tt/4ZtNAg2

Post a Comment

0 Comments