புதுச்சேரி: ``கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வையுங்கள்!” - சிக்னல் கொடுத்த முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-வது தொடக்க விழா 100 அடி சாலையில் உள்ள கட்சி  தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய அவர், ``இது ஒரு மகிழ்ச்சியான நாள். புதுவை  மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் கட்சியை தொடங்கி, உங்கள் உறுதுணையோடு மக்களிடம் வாக்குகளை பெற அடிக்கல் நாட்டிய நாள். புதுவை மக்களின் நலன், மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. இந்த எண்ணத்தை ஏற்கனவே நாம் ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளோம். தற்போது மீண்டும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து வாக்கு கேட்டு  ஆட்சியில் அமர்ந்துள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது புதுவை மக்கள் நமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை அளித்தனர். அப்போதும் நாம் ஆட்சியின் குறைகளை, நிர்வாக சீர்கேட்டை, அவலத்தை சுட்டிக்காட்டினோம்.

கட்சி கொடியை ஏற்றும் முதல்வர் ரங்கசாமி

கடந்த கால காங்கிரஸ் ஆட்சி எப்படி செயல்பட்டது என்பதை எல்லோரும் அறிவீர்கள். ஏற்கனவே நடைமுறையில் இருந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்களையும்  கொண்டு வரவில்லை. நிர்வாகமும் சீர்கெட்டு, புதுவையின் வளர்ச்சியே பாதிக்கப்பட்டது. அதையடுத்து ஜனநாயக ரீதியாக பா.ஜ.க-வுடன்  கூட்டணி அமைத்து, மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆசியோடு, புதுவையின் வளர்ச்சிக்கு நல்ல  நிர்வாகத்தை சிறப்பாக செய்துள்ளோம். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முடக்கப்பட்ட, நிறுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் செயல்படுத்தி வருகிறோம்.  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வாழ்வாதாரத்தை உருவாக்கியுள்ளோம். நிர்வாகத்தை சீரமைத்து புதிய உத்வேகத்தோடு செயல்படுத்துகிறோம். காங்கிரஸ் ஆட்சி மத்திய அரசோடும் நல்ல உறவு இல்லாத நிலையில் இருந்தது. இதனால்தான் மாநில வளர்ச்சி  பாதிக்கப்பட்டது. ஆனால் நாம் பொறுப்பேற்றவுடன் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக அக்கறை எடுத்துள்ளோம்.

மோசமான  சாலைகள் அனைத்தையும் சீரமைத்து வருகிறோம். புதிய சாலைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பொதுப்பணி, உள்ளாட்சித் துறைக்கு தேவையான நிதி வழங்கியுள்ளோம். கட்சியின் நோக்கமே மாநில அந்தஸ்து பெறுவதுதான். மத்திய அரசு அதை கண்டிப்பாக தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதற்காகத்தான்  பிரதமரை சந்திக்கும்போதும், கடிதம் மூலமும் மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கட்சியும் நன்றாக  வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அரசு பணியிடங்கள் அனைத்தும் காலியாக இருந்தது. இதனால் துறைகளே செயல்பட முடியாத நிலை இருந்தது. தற்போது எந்த முறைகேடுகளும் இன்றி, யாரும் குறைசொல்ல முடியாத வகையில் எல்.டி.சி, யு.டி.சி, காவல்,  வருவாய், சுகாதாரத்துறை என அரசுத் துறை காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறோம். இன்னும் பல பணியிடங்களை நிரப்ப  உள்ளோம்.

சேதராப்பட்டு நிலத்தை மத்திய அரசிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளோம். அங்கு மருத்துவப் பூங்கா, தகவல் தொழில்நுட்பப் பூங்கா, புதிய தொழிற்சாலைகளை அமைக்க உள்ளோம். இதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க  உள்ளோம். அதில் வெற்றி பெறுவது மிகவும் அவசியமானது. இந்த தேர்தலில் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும். தேர்தலில் முழு உத்வேகத்தோடு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும். கட்சியில் 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்படும். அந்த குழுவுக்கு ஆலோசனை கூற 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். கட்சியில் அமைப்புகளும் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்தும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி புதுவையில் மலர வேண்டும். அதற்கு  தொண்டர்கள் பாடுபட வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணி  அரசுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.



from Vikatan Latest news https://ift.tt/2X1psOI

Post a Comment

0 Comments