Doctor Vikatan: செல்லப் பிராணிகள் வளர்த்தால் அலர்ஜி வருமா... நோய் எதிர்ப்பாற்றல் கூடுமா?

Doctor Vikatan: நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களிடம் இருவித கருத்துகளைக் கேட்கிறோம். சிலர், அவற்றால் ஆஸ்துமா, வீஸிங் உள்ளிட்ட அலர்ஜி வருவதாகச் சொல்கிறார்கள். வேறு சிலரோ, காலப்போக்கில் அவற்றால் தங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். இந்த இரண்டில் எது உண்மை.... செல்லப் பிராணிகளை வளர்ப்பதால்,  ஒருவரது நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய்  சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி  பாலகிருஷ்ணன்

மருத்துவர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன்

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை என்பது அனைவருக்கும் ஏற்படுவது கிடையாது. மொத்த மக்கள்தொகையில் 10 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இது காணப்படுகிறது. குறிப்பாக, பூனைகளின் உடலில் இருந்து உதிரும் செதில்கள் (Cat Dander) அதிகப்படியான அலர்ஜியை உண்டாக்கும். இதுவும்கூட 10 முதல் 20 சதவிகித மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

விலங்குகளுடன் இருக்கும்போது உங்களுக்கு அலர்ஜி ஏற்பட்டால் மட்டுமே, அவற்றை வளர்க்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.  கர்ப்பிணிகளிடம், செல்லப்பிராணிகளின் கழிவுகளைச் சுத்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்படுமே தவிர, செல்லப்பிராணிகளை வளர்க்கவே கூடாது என்று எந்த மருத்துவரும் பொதுவாகச் சொல்வதில்லை. மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே நாம் வளர்ப்புப் பிராணிகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அதையும் தாண்டி, அலர்ஜிக்கு உள்ளாகிறவர்கள், அவற்றிடம் இருந்து விலகித்தான் இருக்க வேண்டும். 


வளர்ப்புப் பிராணிகளில், பரவலாகப் பலருக்கும், பூனை வளர்ப்பதால் அலர்ஜி ஏற்படும். அந்நிலையில் அவர்கள், பூனைகளை வளர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும். 
மற்றோர் முக்கிய உதாரணம், புறாக்களால் ஏற்படும் நுரையீரல் நோய் (Pigeon Allergy/Lung Disease). இத்தகைய தீவிர அலர்ஜி இருப்பவர்கள், அந்தப் பறவைகளிடமிருந்து விலகி இருப்பது மட்டுமே தீர்வாகும். மற்றபடி, வீட்டில் உள்ளவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் தாராளமாக நாய், பூனை போன்றவற்றை வளர்க்கலாம்.

செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

செல்லப் பிராணிகள் வளர்ப்போர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எப்போதும் வலியுறுத்துவோம். 
அதன்படி செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் அவற்றை படுக்கையில் அனுமதிக்காதீர்கள்.  அவற்றிடமிருந்து உங்களுக்குத் தொற்று பரவ வாய்ப்புள்ளது. உங்கள் செல்லப்பிராணிகளைத் தவறாமல் குளிப்பாட்டி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் எப்படி உங்களைச் சுத்தமாக வைத்திருக்கிறீர்களோ, அதேபோல உங்கள் செல்லப்பிராணிகளையும் பராமரிக்க வேண்டும்.

வீட்டில் யாருக்காவது அலர்ஜி அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரிடம் ஆலோசித்து, அது செல்லப்பிராணியால் தான் ஏற்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதை ஒரு பொதுவான விதியாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து இது மாறுபடும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   



from Vikatan Latest news https://ift.tt/DBsJWKA

Post a Comment

0 Comments