தஞ்சை மாவட்டம் ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்: நோய் தீரும்.. சத்ரு பயம் விலகும்... அனுமன் வழிபட்ட ஈசன்!

தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 31-வது தலம் ஆடுதுறை. கும்பகோணம் - மயிலாடுதுறை பேருந்து மார்க்கம் மற்றும் ரயில் மார்க்கம் மூலம் ஆடுதுறைக்குச் செல்லலாம்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர் மற்றும் வள்ளலார் போன்றவர்களால் பாடப்பெற்ற பெருமைக்குரிய ஆலயம். ஸ்ரீபவளக்கொடியம்மை உடனாய ஸ்ரீஆபத்சகாயேஸ்வரராக ஈசன் இத்தலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். தல விருட்சம் பவள மல்லி. தீர்த்தம், சூரிய தீர்த்தம், சகாய தீர்த்தம் ஆகியன.

இத்தலம் ராமாயணத்தோடு தொடர்புடையது. ராமாயண காலத்தில் கிஷ்கிந்தை நாட்டை ஆட்சி செய்த வானர அரசன் வாலி. வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் பகை ஏற்பட்டது. இருவரும் கடுமையாக சண்டையிட்டனர். வாலியிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் அச்சமடைந்த அசுரன், புதர்கள் நிறைந்த இருண்ட குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டான். தன் படையுடன் அவனைத் தேடிச்சென்ற வாலி, தன் சகோதரனான சுக்ரீவனை குகைக்கு வெளியே காவல் இருக்குமாறு பணித்தான்.

ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்

குகைக்குள் சென்ற வானரங்கள் அனைவரும் வந்துவிட்ட நிலையில் வாலி மட்டும் வரவில்லை. ஓராண்டு கடந்துவிட்டது. எனவே, வாலி கொல்லப்பட்டிருக்கலாம் என்று சுக்ரீவன் தவறாகக் கருதினான். எங்கே மாயாவி வெளியே வந்துவிடுவானோ என்கிற அச்சத்தில் குகையின் வாசலை ஒரு பெரும் பாறையால் மூடினான். பிறகு நாட்டுக்குத் திரும்பி மன்னனாக முடிசூட்டிக்கொண்டான்.

இந்நிலையில் அசுரனைக் கொன்றுவிட்டு வாலி திரும்பியபோது, குகை மூடியிருப்பது கண்டு அதிர்ந்தான். ஒருவழியாகப் போராடி வெளியே வந்து கிஷ்கிந்தையை அடைந்த போது, சுக்ரீவன் அரசாட்சியில் இருப்பதைப் பார்த்ததும், வாலிக்குக் கடும் கோபம் உண்டானது.

குகை வாசலை மூடிவிட்டு அரசைத் தந்திரமாகக் கைப்பற்றியதாக சுக்ரீவன் மீது குற்றம்சாட்டி, அவனை நாட்டை விட்டே வெளியேற்றினான்.

தன் தவறான அனுமானத்தால், அண்ணனுக்குத் தீங்கு இழைத்துவிட்டதாகக் கருதிய சுக்ரீவன், அதற்குப் பரிகாரம் தேடியும். வாலியால் தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், சிவபெருமானை வேண்டினான்.

உடனே சுக்ரீவனை, அன்னப் பறவையாக உருமாற்றி வாலியிடமிருந்து காப்பாற்றியதுடன், `ஆடுதுறைக்குச் சென்று வழிபடுக' என்றும் அருளினார் ஈசன். சுக்ரீவனை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் இத்தலத்து ஈசன் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார் என்கிறது தல புராணம்.

ஒருமுறை, நாரதர் ஆகாய வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஓரிடத்தில் அனுமன் இருப்பதைக் கண்டு கீழே இறங்கினார். அனுமன் ராமனைத் துதிப்பதில் தன்னையே மறந்திருந்ததால் நாரதர் வருவதைக் கவனிக்கவில்லை.

அதனால் சினம்கொண்ட நாரதர் அனுமனின் சங்கீத கலை மறந்து போகுமாறு சபித்தார். இந்தச் சாபத்திலிருந்து விடுபட அனுமன் இத்தலத்து ஈசனை வணங்கி கலைகளைத் திரும்ப பெற்றாராம்.

ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்

தில்லையில் ஈசன் நிகழ்த்திய திருநடனக் காட்சியைக் காண தேவர்களும் பிற முனிவர்களும் ஈசனிடம் 'எங்களுக்கும் அந்த நடனம் காணும் பாக்கியத்தை அருள வேண்டும்' என்று வேண்டினர். அதன்படி இத்தலத்தில் சிவபெருமான் திருநடனம் ஆடி அருளினார். எனவே, நடனக் கலைஞர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.

இத்தலத்தில் முருகன் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற பெருமைக்குரியவர். சுவாமியின் கருவறைச் சுற்றிலுள்ள அண்ணாமலையாரின் கண்களும், முருகப்பெருமானின் கண்களும் சமதளத்தில் நேருக்கு நேராகச் சந்திப்பது போன்ற அமைப்பு, வேறு எந்த ஆலயத்திலும் காண்பதற்கரிய சிறப்பாகும்.

ஒரு குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிப்பட்டு பரிகார பூஜை செய்துகொண்டால், அனைத்து தீவினைகளிலிருந்தும் விடுபடலாம்.

சிறந்த சிவ பக்தரான ஹரதத்தர், தினமும் திருநீலக்குடி, திருக்குழம்பியம், திருக் கோடிக்காவல், கஞ்சனூர், திருமாந்துறை, திருமங்கலக்குடி ஆகிய தலங்களைத் தரிசித்து விட்டு, இறுதியாக ஆடுதுறை ஈசனை தரிசித்து விட்டுதான் உணவு அருந்துவாராம்.

ஒருநாள் காவிரியில் வெள்ளம் கரை புரண்டோட ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்த ஹரதத்தர், `இறைவா, இதென்ன சோதனை... உன்னைத் தரிசிப்பது எப்படி?' என்று ஆடுதுறை ஈசனிடம் முறையிட்டாராம். உடனே ஆற்றின் அக்கரையில் இருந்த ஹரதத்தருக்கு, இறைவன் அங்கேயே காட்சி தந்து அருள்புரிந்தாராம்.

ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்
ஆடுதுறை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர்

ஆபத்தில் இருப்போரை காக்கும் தெய்வமான இத்தல ஈசனை வழிபட்டால், இன்னல்களும் பகையும் அகலும். சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம். உயிருக்கு ஆபத்தான நோய்களிலிருந்து குணம் அடையலாம்.

திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிட்டும். சகல சௌபாக்கியங்களுடன் வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை ஆடுதுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும்... நலமாகும்!



from Vikatan Latest news https://ift.tt/HIShyo0

Post a Comment

0 Comments