கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. பின்னர் திடீரென காணாமல் போன அச்சிறுமி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடினர். சிறுமி கிடைக்காத நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையி்ல், கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில் தேடப்பட்டு வந்த சிறுமி, சடலமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

அடையாளம் தெரியாத நபர்கள் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து உடற்கூராய்வு முடிவிலேயே உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்துக்குரிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமி கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, சிறுமியின் உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from Vikatan Latest news https://ift.tt/bh7H5gB
0 Comments