திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை. இறைவனிடம் சரணடைந்தால் சகலவிதமான துன்பங்களில் இருந்தும் அவர் நம்மைத் தடுத்துக் காப்பார். அப்படி நாம் சரணடைய வேண்டிய ஒரு சிவத்தலம் புகலூர். திரு என்னும் பெருமைப்படுத்தும் முன்னொட்டோடு திருப்புகலூர் என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்தத் தலத்தில் ஈசன் அக்னீஸ்வரராக அருள்பாலிக்கிறார். வாருங்கள் இத்தலத்தின் மகிமைகளை அறிந்துகொள்வோம்.
நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் நன்னிலத்திலிருந்து கிழக்கே சுமார் 10 கி.மீ. தூரத்திலும், நாகப்பட்டினத்திலிருந்து மேற்கே 25 கி.மீ. தொலைவிலும் திருப்புகலூர் அமைந்துள்ளது.

வட மொழியில் இத்தலத்தை 'சரணாபுரி' என்று அழைக்கிறார்கள். வாகீசன் என்ற சிவஞானி ராவணனுக்கு உபாயம் சொல்லி அதன் பலனாக பூமியில் திருநாவுக்கரசராகப் பிறந்தார். பல சிவத்தொண்டுகளைப் புரிந்து ஈசனைப் பாடல்களாலும் வழிபட்டு முக்தியை நாடிய அவருக்கு ஈசன் முக்தி அருளிய தலம் திருப்புகலூர்.
தற்காலத்தில் அனைவரும் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். புதிய வீடு மனை வாங்கும்போது வாஸ்து சரியாக இருக்கிறதா என்று கவனிக்கிறார்கள். ஆனால் எல்லாருக்கும் வாஸ்து தோஷம் இல்லாத வீடோ மனையோ கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு புகலிடமாக அமைகிறது திருப்புகலூர்.
சகலவித வாஸ்து பிரச்னைகளையும் தீர்க்கும் தலமிது. புதிதாக வீடு கட்டுவோர் பூஜிக்கப்பட்ட கற்கள் வாங்கிச் செல்லும் கோயிலிது.
நாற்புறமும் அகழி சூழ பிரமாண்டமாக அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் மூலவர் அக்னீஸ்வரர். சரண்யபுரீஸ்வரர், பிரத்யக்ஷ வரதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பிகை கருந்தார்க்குழலி, சூளிகாம்பாள் என்ற திருநாமமும் உண்டு. நிறைமாத கர்ப்பிணி ஒருத்தி பிரசவ வலியால் துடிக்க, ஆதரவற்ற அவளுக்கு அம்பிகையே மருத்துவச்சியாய் உதவி செய்தாள். அதனாலேயே இந்த அம்பிகை சூளிகாம்பாள் என்ற திருநாமம் உண்டாயிற்று. கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவமாக வேண்டிக் கொள்ளும் தாயாக இங்குள்ள அம்பிகை கொண்டாடப் படுகிறாள். இவள் தினமும் சாயரட்சைக் காலத்தில் ராஜராஜேஸ்வரியாகக் காட்சி தருகிறாள். அவ்வேளையில் வணங்க பதவி உயர்வு, செல்வாக்கு-சொல்வாக்கில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

மேலும் திருமணம் மற்றும் மகப்பேறு வேண்டுபவர்கள், இந்த அம்பிகைக்கு வெள்ளிக்கிழமைகளில் வெள்ளைப் புடவை சார்த்தி அர்ச்சித்தால் வேண்டியது நடக்கும் என்கிறார்கள். இறந்த காலத்துக்கென பூதேஸ்வரர், நிகழ்காலத்துக்கென வர்த்தமானேஸ்வரர், எதிர்காலத்துக்கென பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூன்று காலத்துக்கான லிங்கமூர்த்திகள் அமைந்த ஒரே ஆலயம் இது.
ஆதி சித்தர்களான 18 சித்தர்கள் வழிபட்ட ஆலயமிது. இங்குதான் அப்பர், சம்பந்தர், நீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலக்க நாயனார், முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார் ஆகியோர் முருக நாயனாரின் திருமடத்தில் தங்கி புகலூர் இறைவனை வணங்கினார்கள். இங்கு ஒரு சித்தரின் ஜீவசமாதியும் உள்ளது. அது போகரின் சமாதி என்று நம்பப்படுகிறது.
முரன் என்ற அசுரனைக் கொன்ற பாவம் தீர விஷ்ணு தலவிருட்சமான புன்னைமரமாகி நின்று ஈசனை பூசிப்பதும் இங்குதான்.
காண்டீப வனத்தை அழித்த அக்னி பகவானின் சாபம் நீங்க தவம் செய்து அருள்பெற்ற தலம் இது. அதனாலேயே இறைவன் அக்னீஸ்வரர் என்றானார். தீயாடியப்பர் என்பது அழகு தமிழ்ப் பெயர். உருவமில்லாத அக்னி பகவானுக்கு இங்கு சிற்பத் திருமேனியோடு தனிச் சந்நிதி இருப்பது சிறப்பு.
சனியால் பாதிக்கப்பட்ட நளன், இங்கு வந்து குளத்தில் குளித்தெழுந்த போதுதான் ‘திருநள்ளாற்றில் விட்டுவிடுகிறேன்’ என சனீஸ்வரனால் அருளப்பட்டாராம். அதனால் இங்கு சனீஸ்வரன் அனுக்கிரஹ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். காக்கையைத் தோளில் சுமந்தபடி நளமகராஜனுக்கு இங்கு சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

திருப்புகலூரில்தான் சுந்தரர் தலைக்கு வைத்திருந்த செங்கல் தங்கமானது. இதனால் இங்கு வந்து செங்கல் வாங்கி வீடு கட்டினால் மேன்மையடையும் என்பது நம்பிக்கை. சதய நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் தனுசு ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய பெருமான் அக்னீஸ்வரன்.
பாணாசுரனின் தாயான மாதினியின் சிவபூசையைத் தலைகுனிந்து ஈசன் ஏற்றதால் இங்குள்ள மூலவருக்குக் கோண பிரான் என்ற திருநாமமும் உண்டு. ஏராளமான சந்நிதிகள் கொண்ட கோயில் இது. சுற்றுப் பிராகாரத்தில் உள்ள வாதாபி கணபதி அளவில் பெரியவர். அகத்தியரோடு புராணத் தொடர்பு கொண்டவர். சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் ஈசனின் திருவடிகளில் கலந்தார் அப்பர் பெருமான். இதனால் சித்திரை சதயத்தில் அப்பர் சுவாமிகளுக்கு பத்து நாள்கள் பெருவிழா எடுத்துச் சிறப்பிக்கப்படுகிறது.
ஆன்மாக்களின் பாவங்களை நீக்கி, கர்மங்களைக் குறைத்து, வாழ்வில் நலமும் வளமும் வழங்கும் புகலூர் அக்னீ ஸ்வரனை ஒருமுறை வணங்கினால் போதும். சகலவித கர்மாக்களும் தீர்ந்து உங்கள் வாழ்க்கையே சந்தோஷமாக மாறும்.
from Vikatan Latest news https://ift.tt/cohb6ZB
0 Comments