தமிழ்நாட்டில் புதிதாக பதவியேற்றிருக்கும் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, முதலமைச்சரின் குறிப்பிட்ட புகைப்படம் ஒன்று அரசு அலுவலகங்களில் இடம்பெற வேண்டும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான அலுவலங்களில் முதலமைச்சர் படம் இடம்பெற்றுள்ளது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோலோச்சி வரும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அலுவலகங்களில் முதல்வரின் படங்களை வைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் முதல்வரின் படத்தை வைக்க தி.மு.க மற்றும் அ.தி.மு.க- வைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் முன்னாள் முதலமைச்சரின் படங்கள் இடம்பெற வேண்டும் என ஸ்டாலின் மற்றும் பழனிசாமியின் படங்களையும் சுவற்றில் மாட்டியுள்ளனர். இதற்கு த.வெ.க நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்த நிலையில், நகர்மன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வருகின்றனர் நகராட்சி அதிகாரிகள். மக்களுக்கான அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்க வேண்டிய கூட்டத்தில் புகைப்படங்களை சுவற்றில் மாட்டுவது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டு வரும் செயல் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
from Vikatan Latest news https://ift.tt/qxR8Mu3
0 Comments