Doctor Vikatan: என் மகனுக்கு 10 வயதாகிறது. பள்ளிக்கூடத்தில் தேர்வு நெருங்கினாலே அவனுக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பித்து விடுகிறது. பயத்தினால் இப்படி ஆகுமா... இதற்கு என்ன செய்வது, தானாகச் சரியாகுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் சுதீப்தா குமார் ஸ்வெயின்

தேர்வு நெருங்கும் காலங்களில் வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உப்புசம் (bloating) போன்ற பிரச்னைகள் ஏற்படுவது அசாதாரணம் அல்ல. மூளையில் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக குடலில் வெளிப்படும் ஒரு வகையான அறிகுறிதான் இது.
இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய நாம் போதிய அளவு தூங்க வேண்டும். மற்ற செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டாலும், தூங்கும் நேரத்தைக் குறைக்கக் கூடாது. தேர்வு நேரத்திலும் படித்துக்கொண்டே கூடுதல் கவனம் செலுத்தினாலும், ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்குவது மிகவும் அவசியமாகும். உங்கள் மகன் போதுமான அளவு தூங்குகிறானா என்பதைக் கண்காணித்து, அதற்கு வழி செய்யுங்கள்.
எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இக்காலகட்டத்தில் பால் பொருள்கள் மற்றும் பீன்ஸ் போன்ற உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தேர்வு நேரத்தில் படிக்க வேண்டியது முக்கியம்தான் என்றாலும், அவ்வப்போது இடைவெளி எடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால், குடல் எரிச்சலைக் குறைக்கவும் மூளையை அமைதிப்படுத்தவும் மருந்துகளை உட்கொள்ளலாம். ஆனால், கடைகளில் நேரடியாகக் கிடைக்கும் (Over the counter) மருந்துகளைத் தவிர்த்து, குடல் நோய் மருத்துவரை (Gastroenterologist) அணுகி ஆலோசனை பெற்றே மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேர்வு போன்ற மன அழுத்த காலங்களில் மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் குறித்த ஆலோசனைகளையும் மருத்துவர் உங்கள் மகனுக்குச் சொல்வார்.
'மூளை-குடல் அச்சு' (Brain-gut axis) என்ற செயல்பாட்டின் காரணமாகத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இதைக் குணப்படுத்த வாழ்வியல் மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் ஆகிய இரண்டையும் நாம் பின்பற்ற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Vikatan Latest news https://ift.tt/Ba5Qs0I
0 Comments